July 31, 2016

நோம்பு பெருநாள்


செங் சியாங் பில்லிங் கவுண்ட்டரில் பிளாஸ்டிக் கூடையை தூக்கி வைக்கும்போது தான் கணேஷ் கவனித்தார், கடை ஊழியர்கள் அனைவரும் பச்சை நிற சட்டை அணிந்திருந்தனர். பெண்களும் சரி, ஆண்களும் சரி, அனைத்து ஊழியர்களின் சட்டைகளுக்கு பின்னால், மஞ்சள் எழுத்துக்களில் “செலாமத் ஹரி ராயா” என எழுதியிருந்தது.

ஒவ்வொரு பொருளாக “பிங் பிங்” கென்று கவுண்டர்காரி பில்லிங் மெஷீனில் தட்ட, பிளாஸ்டிக் பைகளுக்குள் பொருட்களை வேகமாக அள்ளி போட மற்றோரு பெண் உதவி செய்தாள். எல்லா பொருட்களையும் தட்டிவிட்டு, அந்த பெண் கணேஷை நிமிர்ந்து பார்த்தாள்.


“பே வேவ்” என்று தனது கார்டை நீட்டினார் கணேஷ்.


மூன்று பிளாஸ்டிக் பைகளும், இரு காகித ரசீதுகளும், “தாங்க்யூ!” வையும் கொடுத்தாள் கௌண்ட்டர் பெண்மணி. ரசீதுடன் “ஹரி ராயா ஸ்பெஷல் லக்கி டிரா”விற்கு ஒரு சீட்டும் இருந்தது.


“லக்கி” என்ற வார்த்தையை ஒரு முறை பார்த்தார் கணேஷ். அந்த காகிதத்தை கசக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, தனது தோள் பையும், மூன்று பிளாஸ்டிக் பைகளையும் தூக்கிக்கொண்டு செங் சியாங்கின் பின்புறம் இருக்கும் பாதை வழியாக நடக்க துவங்கினார். இரவு 7 மணி இருக்கும். ஒரு டிரக்கிலிருந்து அடுத்த நாளுக்கான பொருட்களை சில ஊழியர்கள் இறக்கி கொண்டிருந்தார்கள். ஆள் உயர இரும்பு கூண்டுகளுக்குள் இருக்கும் அட்டைப்பெட்டி டப்பாக்கள். அவற்றை நகர்த்த அடியில் சக்கரங்கள்.


அந்த டிரக்கிலிருந்து சிறிது தூரத்தில், கார் பார்க்கிற்கு வண்டிகள் செல்லும் பாதையில், ஒரு பெருச்சாலி செத்து கிடந்தது. அந்த டிரக் ஏற்றி இருக்கலாம் என்று கணேஷ் மனதில் தானாக தோன்றியது. எலியின் பாகங்கள் அனைவரும் காணும்படி, ஷாப்பிங் பேகிலிருந்து வெளியே விழுந்த பொருட்கள் போல இறைந்து கிடந்தன. ரத்தம் காய்ந்திருந்தது. அதை உற்று பார்த்தப்படி கடந்து சென்றார். அழுகும் குப்பையின் நாற்றம் அவர் மூக்கிற்கு எட்டியது. இடது புறத்தில் குப்பைகளை ஒன்றுசேர்க்கும் தற்காலிக குப்பை கிடங்கு. நடைபாதை மேல்நோக்கி உயர ஆரம்பித்தது. கையில் பிடித்திருந்த பிளாஸ்டிக் பைகள் வெட்டியதால், இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றினார்.


5 நிமிடத்தில், பரிச்சயமான பெரிய போர்டு அருகே வந்து விட்டார். அந்த போர்டில் “செலாமத் ஹரி ராயா” என்ற எழுத்துக்களுக்கு பக்கத்தில் ஒரு சீனர் சீருடையில் சிரித்து கொண்டிருந்தார். அவர் யார் என்று கணேஷிற்கு தெரியவில்லை. அந்த போர்டின் பின்னே தான் அவரின் புளோக் உள்ளதாக மனதில் குறித்திருந்தார்.


***


வீட்டிற்குள் நுழைந்து பிளாஸ்டிக் பைகளை மெளனமாக லலிதாவிடம் ஒப்படைத்தார். அவள் பைகளை துழாவி பார்த்துவிட்டு, “சௌ-சௌ இல்லையா?” என்று கேட்டாள்.


“கிடைக்கல”


“அங்க தான் இருந்துச்சே. இன்னிக்கு மத்தியானம் கூட பார்த்தேனே?”


“நான் பாக்கும் போது அங்க இல்ல.”


பைகளை மேஜை மீது லலிதா வைத்தாள். கணேஷ் ஹால் சோபாவில் சாய்ந்தார்.


“என்ன ஆச்சு?”


மேலே சுழன்று கொண்டிருக்கும் மின் விசிறியை பார்த்தப்படி மெளனமாக இருந்தார். அதிலிருந்து தொங்கும் கயிறு காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருந்தது. அந்த கயிறை இழுத்தால் விசிறியின் வேகம் கூடும்.


“ஹே! உன்ன தான். என்ன ஆச்சு?”


“இன்னிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு” என்றார் கணேஷ். குனிந்து தனது தோள் பையிலிருந்து லேப்டாப்பை வெளியே எடுத்தார்.


“என்ன விஷயம்?”


“பீ.ஆர் ரிஜெக்டட் அப்படின்னு”


லலிதா கணேஷை நிமிர்ந்து பார்த்தாள், “நிஜமா தான் சொல்றியா?”


கணேஷ் தனது மொபைலை அவளிடம் தந்தார்.


“ஏனாம்?”


மடியில் இருக்கும் லேப்டாப்பை பார்த்து கொண்டே, தெரியவில்லை என்பது போல கணேஷ் தோள்களை அசைத்தார். “காரணம் சொல்ல மாட்டாங்க. சொல்லணும்னு அவசியம் இல்ல.”


“இது என்ன லாஜிக்? இந்த காரணம்னு சொன்னா தானே அடுத்து ஏதாச்சும் ஸ்டெப் எடுக்க முடியும்?”


கணேஷ் பதில் சொல்லவில்லை.


“இப்போ என்ன பண்ண போறோம்?”


“ஆபீஸ்ல சில பேர் திரும்ப அப்ளை பண்ணி பாக்க சொன்னாங்க.”


“அப்போ இன்னொரு ஏழெட்டு மாசமா?” பெருமூச்சு விட்டாள் லலிதா.


“பாப்போம்”


லேப்டாப் திரையில் எதை தேடுகிறோம் என்று தெரியாமல் கணேஷ் கர்சரை நகர்த்திக்கொண்டிருந்தார்.


“சரி வாங்க சாப்பிடலாம்!”


கணேஷிற்கு சாப்பிட இஷ்டம் இல்லை.


“ஹவுஸ் ஓனர் வரேன்னு சொல்லிருந்தார்”


“என்னவாம் அந்த ஆளுக்கு? அவனை கண்டாலே எனக்கு பிடிக்கல!”


“பாத்ரூம் ஃபிளஷ் வேலை செய்யலன்னு நீ தானே சொன்ன. அத சரி செய்ய ஒரு ப்ளம்பரோட வறாராம்”


“எப்போ?”


“8 மணிக்கு மேலன்னு சொன்னாரு”


“சரியான நேரம் சொல்லலியா?”


“இல்ல. ஆனா வந்துடுவாரு. இன்னும் 10 இல்ல 20 நிமிஷத்துல.”


“என்னவோ. இந்த வீடே ஒரு மாதிரி இருக்கு. அடுப்பு கரெக்ட்டா பாத்ரூமுக்கு வெளிய இருக்கு. எவனாச்சும் இப்படி கட்டுவானா வீட்ட?”


“நீ முதல்லயே இத பாக்கலியா? காண்ட்ராக்ட் ஸைன் போடறதுக்கு முன்னாடி சொல்ல வேண்டிதானே?”


“அன்னிக்கு வீடு பாக்கும் போது இங்க இருந்தவங்க சமச்சுட்டு இருந்தாங்க. அதுனால கிட்சன் சரியா பாக்கல.”


இதற்கு மேல் பேசினால் சண்டை தான் வருமென்று, கணேஷ் திரும்பவும் லேப்டாப் திரைக்கு திரும்பினார்.


“சரி நான் உள்ள இருக்கேன். அந்த ஆள் வந்து சரி செஞ்சுட்டு போனதும் சொல்லு.”


***


“ஹெல்லோ மிஸ்டர் கணேஷ்!” என்று வாசலிலிருந்து ஒரு குரல். கதவு பக்கத்தில் இருக்கும் ஜன்னல் வழியாக, வீட்டு எஜமானர் தனது முகத்தை காட்டி, கைகளை அசைத்து புன்னகைத்தார். பெயர் காலேத். வழவழப்பான முகம். மலாய்க்காரர். தலையில் ஒரு ஸ்போர்ட்ஸ் கேப். வழுக்கையை மறைக்கவா என்ற சந்தேகம் கணேஷிற்கு உண்டு. வியர்வை உறிஞ்சும் தொளதொள சட்டையும் ஷார்ட்ஸும் அணிந்திருந்தார். டென்னிஸ் ஆட போகிறவர் போல. ஆனால் லலிதா பார்த்தால், அவரை டென்னிஸ் ஆடுபவர்களுக்கு பந்து பொறுக்கி போடுபவர் என்று தான் சொல்வாள்.


அவரையே கேட்டால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸிற்கு வேலை செய்வதாக சொல்வார். “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எல்லாம் டூ மூச்! டைகர் ஏர்வேஸ்ஸா இருக்கும்!” என்றாள் லலிதா அவரை முதலில் பார்த்ததும். அவளுக்கு காலேதை சுத்தமாக பிடிக்கவில்லை. வீட்டு வாடகையை 100 டாலர் குறைக்க முடியுமா என்று பேரம் பேசிய போது, மூக்கால் அழுதார். ஹால் சுவர்களை பெயிண்ட் செய்து தர முடியுமா என்று கேட்டதற்கும் அதே வழவழப்பான மூக்கால் அழுதார். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் தானே வந்து கைப்பட வாடகையை கேஷாக வாங்கி செல்கிறேன் என்ற நிபந்தனை வேறு. “இன்டர்நெட் வழியா டிரான்ஸ்பர் பண்ணா அந்த ஆளு அக்கௌண்டுக்கு போகாதா என்ன?” வீட்டு எஜமானர் அவ்வப்போது வந்துபோவது லலிதாவிற்கு பிடிக்கவில்லை.


“ப்ளம்பர் வந்துட்டானா?” காலேத் வாசலில் ஷூவை கழட்டிக்கொண்டே விசாரித்தார்.


“இல்லியே இன்னும் இல்லியே”


“அய்யா!” பெருமூச்சு விட்டபடி உள்ளே நுழைந்து, தலையை வலதும் இடதும் ஆட்டிக்கொண்டு, மொபைலை வெளியே எடுத்தார்.


“அவனுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் போன் அடிச்சேன். இந்நேரம் வந்திருக்கணும். எங்க இருக்கானோ தெரியல.”


“ஓ” என்றார் கணேஷ். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.


“சரி நீங்க வாங்க. நம்ம அந்த டிராயரை சரி செய்வோம்!”


“அந்த டிராயர்” என்பது சமையல் அறை அலமாரியில் இருந்த பல டிராயர்களில் ஒன்று. அலமாரியின் இடது ஓரத்தில் ஒன்றன்கீழ் ஒன்றாக இருக்கும் மூன்று டிராயர்களில் முதல் டிராயர் அது. வீட்டை முதல் முறையாக காண வந்தபோது கணேஷ் அதை சும்மா திறந்து பார்த்தார். கையோடு அதன் முன் பாகம் வந்துவிட்டது.


வீடு பழைய வீடு. காமன்வெல்த்தில் தங்கிளின் ஹால்ட் என்னும் கட்டிடம். 1960களில் கட்டப்பட்டது. அநேகமாக சிங்கப்பூரின் அனைத்து மூத்த குடிமக்களும் இந்த கட்டிடத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கி இருக்க வாய்ப்புண்டு என கணேஷ் நினைத்தார். தனது பழைய வீட்டு எஜமானரிடம் சொன்னபோது அவர், “நான் என்னோட சின்ன வயசுல அங்க தான் வளந்தேன்” என்று ஃப்ளாஷ்பேக் மோடுக்கு போயிட்டார்.


இன்னும் நான்கு வருடங்களில் இந்த கட்டிடத்தை முழுதாக இடித்து தகர்த்துவிட்டு, புதிதாக எச்.டீ.பீ கட்டிவிடும். அது வரை எப்படியாவது தேத்தி விடலாம் என்ற முடிவில் இருந்தார் வீட்டு எஜமானர் காலேத்.


இப்போது கூட அந்த கைய்யொடு வந்த டிராயரை “சரி செய்யலாம்” என்று அவர் சொன்னதன் அர்த்தம், அதை டேப் போட்டு திறக்கவே முடியாமல் ஒட்டிவிடலாம் என்பது தான். இதற்காகவே சாம்பல் நிறத்தில் ஒரு டேப் வாங்கி வந்திருந்தார். ஆணி அடித்து சரி செய்யும் அளவிற்கு பலகை இல்லை. கரையான் கரைத்தது போல செதில் செதிலாக பிரிந்து வந்துவிட்டது. ஆகாவே டேப் போட்டு விட்டால், திறக்கவே தேவை இல்லை என்ற அற்புதமான யோசனையுடன் வந்திருந்தார் காலேத்.


ஹாலிலிருந்து கிட்சனுக்கு செல்கையில், ஹால் மேசையில் உள்ள முறுக்கு டப்பாவை பார்த்ததும், “முறுக்கு!” என்றார் காலேத்.


“ஆமா முறுக்கு” என்றார் கணேஷ்.


“என் பொண்ணுக்கு முறுக்கு ரொம்ப பிடிக்கும்!”


“ஓ”


வாயை பிளந்து கிடக்கும் டிராயர் முன்னே காலேத் குந்தி அமர்ந்தார். முதலில் டேப்பை பல்லால் கடிக்க போனார். பிறகு கத்தரிக்கோல் இருக்கிறதா என்று கணேஷிடம் கேட்டார். பிறகு அதை ஒரு கையில் வாங்கிக்கொண்டு, மற்றோரு கையில் டிராயர் மூடியை வாங்கிக்கொண்டு, மெதுவாக ஒட்ட ஆரம்பித்தார்.


“காலைலேர்ந்து நான் இன்னும் சாப்பிடல, மிஸ்டர் கணேஷ். ஃபாஸ்டிங். ரொம்ப வீக்கா இருக்கேன். தலை வேற லைட்டா சுத்துது.”


அப்போது தான் கணேஷிற்கு ஹரி ராயாவை முன்னிட்டு சாப்பிடாமல் இருப்பார்கள் என்பது நினைவுக்கு வந்தது.


“ஏதாச்சும் சாப்பிடுறீங்களா?”


“இல்ல பரவாயில்ல. இங்க வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும். நான் இந்த மாசம் வெறும் டேட்ஸ் தான் சாப்பிடறேன்.”


“ஓ அப்படியா”


“ஏர்லைன்ஸ் வேற கொல்லுறாங்க! தே ஆர் ஸ்டுப்பிட் லா! இன்னும் அடுத்த மாச செட்யூல் வரல. நான் ஹரி ராயாக்கு ஊர்ல இருப்பேனான்னே தெரியல. உங்களுக்கு லீவ் உண்டு தானே மிஸ்டர் கணேஷ்?”


“ஆமா ஆமா லீவ் தான்… “


பாவம் அவர் புலம்பும் போது, நமக்கு லீவ் என்று சொன்னால் வறுத்த படுவாரோ என்று கணேஷ் மனதில் பட்டது. உடனே பேச்சை திசை திருப்ப, “நீங்க பொறந்து வளந்தது சிங்கப்பூரா?”


“மலேசியா. பேசாம அங்கேயே இருந்திருக்கலாம்.”


“ஏன்? சிங்கப்பூருக்கு என்ன?”


“அய்யோ! கேக்காதீங்க மிஸ்டர் கணேஷ். இந்த ஊருல ஒரு பக்கம் காசு வருது. இன்னொரு பக்கம் காசு போய்க்கிட்டே இருக்கு!”


இந்த வாக்கியத்தை வலியுறுத்த, இடது பாக்கெட்டுக்குள் கைவிடுவது போலவும் வலது பாக்கெட்டிலிருந்து கை வெளியே வருவது போலவும் செய்கை செய்தார்.


“கவர்ன்மென்ட் காசு புடுங்கறதுலயே குறியா இருக்கு. எனக்கு மட்டும் மனைவி கொழந்த இல்லாட்டி, நான் சிங்கப்பூர்லயே இருக்க மாட்டேன் தெரியுமா?”


வீட்டிற்கு டெபாஸிட் கட்டும் போது காலேதின் மனைவியை பார்த்த ஞாபகம் கணேஷிற்கு. சிகப்பு நிற ஹிஜாப் மற்றும் ஸ்டைலான கண்ணாடி போட்டிருந்தார். “ஹெல்லோ” என்று வாயால் மட்டும் சொல்லி நின்ற கணேஷிடம் முன்வந்து கை குலுக்கினார். அவரின் கை மென்மையாக இருந்தது. காலேதின் வயதிற்கு மிக குறைவான வயது போல தோன்றியது.


“இங்க ஸ்கூலு, ஹாஸ்பிடல், இது ரெண்டு மட்டும் தான் உருப்படியா இருக்கு. இல்லாட்டி நான் மலேசியாவே போய்டுவேன்.”


காலேத் டிராயரை மேலிருந்து கீழ் ஒட்டிவிட்டார். அதை அழுத்தியப்படி தலையை சற்று பின் நகர்த்தி பார்த்தார். பிறகு குறுக்கே ஒட்டுவதற்கு டேப் பிரித்தார்.


“போன வாரம் கூட கே.எல் போயிருந்தேன். கார் ஓட்டிக்கிட்டு ரோட்டுல போறேன், பக்கத்துல ஒரு பீ.எம்.டபிள்யூ கார் வருது. நான் இங்க என்னோட சாதாரண காருக்கு கட்டின காசுக்கு அங்க பீ.எம்.டபிள்யூ வாங்கலாம் தெரியுமா? அதுவும் இங்க பத்து வருஷம் கழிச்சு என் காரு துண்டு சீட்டு  ஆகிடும்.”


“துண்டு சீட்டா?”


“உங்களுக்கு தெரியாது? உங்க காரு நீங்க வித்தாகணும். அப்புறம் ஒரு பேப்பர் கொடுப்பாங்க. இது தான் உன் காருக்கான விலை அப்படின்னு. அத நீங்க காசா வாங்கிக்க முடியாது. கென்னாட்! திரும்ப இன்னொரு கார் வாங்குறத்துக்கு உபயோகிச்சா தான் உண்டு.”


“பப்லிக் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்ணறதுக்கு, கவர்ன்மென்ட் இப்படி செய்றாங்க போல.”


“பப்லிக் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்ற மாதிரியா இருக்கு? கண்டவனெல்லாம் ஏறுறான்.” முகத்தை அருவருப்புடன் சுழித்தார். அந்த “கண்டவன்” லிஸ்ட்டில் தானும் இருப்போமா என்று கணேஷ் யோசித்தார்.


“உங்களுக்கு இங்கேர்ந்து ஆபீஸ் போக வசதியாத்தானே இருக்கு?”


“ஆன்ன்… எம்.ஆர்.டீ தான் பக்கத்துலயே இருக்கே… இல்ல பஸ் கூட எடுக்கலாம்.”


“மிஸ்டர் கணேஷ், நீங்க என்ன வேலை செய்யுறீங்க? ஐ.டீ தானே?”


“ஆமா”


குறுக்கேயும் நெடுக்கேயும் ஒட்டிவிட்டு டேப்பை எழுந்து பார்த்தார். பிறகு கீழேயும் டேப் ஒட்ட சென்றார்.


“அது ஒட்டாதீங்க. கீழ டேப் போட்டீங்கன்னா கீழ இருக்கற டிராயர திறக்க முடியாது”


“ஓ ஆமான்ல! சரி எங்க இந்த பிளம்பர்?”


திரும்பவும் தலையை வலதும் இடதும் ஆட்டிக்கொண்டு, மொபைலை எடுத்து திரையை பார்த்தார் காலேத்.


“நீங்க சாப்பிட்டீங்களா?”


“இன்னும் இல்ல” என்றார் கணேஷ், “வைஃப் உள்ள தான் இருக்காங்க. இத முடிச்சிட்டு சாப்பிடலாம்னு இருக்கோம்”


“ஓ அப்படியா? இல்ல இல்ல! மொதல்ல சாப்பிடுங்க. நான் கீழ வெயிட் பண்ணுறேன். நீங்க சாப்பிட்டு முடிச்சிடுங்க. அப்புறம் ப்ளம்பரை கூட்டிட்டு வரேன்”


மளமளவென்று வீட்டை விட்டு வெளியேறினார் காலேத். அவர் சென்ற ஐந்தே நிமிடத்தில் பிளம்பர் வந்துவிட்டார்.


“சாரி ஆன்ன்” என்றபடி உள்ளே நுழைந்தார். ஒல்லி உடல். அழுக்கு சட்டை. பீடி குடித்து கரை படிந்த பற்கள். கருப்பு வெள்ளை கலந்த தலை முடி ஒட்டவைத்தது போல நீட்டி கொண்டிருந்தது.


“எந்த டாய்லெட்?” என்று கேட்டார்.


“காமன் டாய்லெட்” என்று கணேஷ் அவருக்கு சமையல் அறையை ஒட்டியிருக்கும் கழிவறையை காண்பித்தார். பிளம்பர் நேராக உள்ளே சென்றார். ஃபிளஷ் கீழே இருக்கும் குழாய்களை குனிந்து சோதனை செய்தார். பிறகு தனது கைபையை விசிறி, எல்லா பொருட்களையும் தரையில் கொட்டினார். பல விதமான நட்டு போல்ட்டுகள், ஆணிகள், சிறிய குழாய் துண்டுகள் இவை அனைத்தும் தரையில் சிதறின.


கணேஷ் காலேதுக்கு வாட்ஸாப் மூலம் மெசேஜ் அனுப்பினார். இரண்டு நிமிடங்களில் காலேத் மீண்டும் மேலே வந்தார்.


“நீ எப்படி மேல வந்த? நான் கீழ தானே நின்னிட்டு இருந்தேன்?” என்று ப்ளம்பரிடம் ஆங்கிலத்தில் கேட்டார். பிளம்பரும் ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.


“படிக்கட்டு ஏறிதான் வந்தேன்!”


“ஓ! அவன் இந்த பக்கம் இருக்கற படிக்கட்டு எடுத்துட்டான் போல” என்று கணேஷிற்கும் புரியவைப்பதுப்போல் சொன்னார் காலேத். கணேஷ் தலை ஆட்டினார்.


“ஏன் நீ இவ்வளோ லேட்?” டாய்லெட் வாசலில் ஒரு கையை ஊன்றியபடி, குனிந்து வேலை செய்யும் ப்ளம்பரை கேட்டார் காலேத்.


“நீ எனக்கு காலைல கால் பண்ணி கண்ஃபர்ம் பண்ணனும்.”


“அதான் இன்னிக்கு வரணும்னு திங்கட்கிழமையே சொன்னேனே. நீ கூட சரி சரின்னு சொன்ன?”


“எனக்கு ஞாபகம் இருக்காதுலா! அதுக்கு தான் ஒரு நாள் முன்னாடி ஞாபக படுத்தினா நான் வந்துடுவேன். வயசு ஆச்சுல்ல?” ஒரு சிறிய ஸ்பேனர் எடுத்து ஏதோவொரு குழாயை திருகிக்கொண்டே பேசினார், “நல்ல வேல நீ இன்னிக்கு கூப்பிடும்போது நான் பக்கத்து ஏரியால இருந்தேன். அதுனால வர முடிஞ்சுது.”


“எங்க? இவ்வளோ லேட்டா வர? நான் வேற காலைலேர்ந்து இன்னும் சாப்பிடல தெரியுமா?”


“என் கிட்ட சைக்கிள் தான் இருக்கு. மெதுவாத்தான் வர முடியும்? எனக்கு என்ன உன்ன மாதிரி கார் இருக்கா? ஆமா, உன் கிட்ட எத்தனை காரு? ஒண்ணா ரெண்டா?” இளித்தப்படி பிளம்பர் கேட்டார்.


“எதுக்கு இப்போ? வேலைய பாருலா. ரொம்ப பேசாதே!”


“உனக்கென்னப்பா? வீடு வெச்சிருக்க. எனக்கு பொண்டாட்டி கூட இல்ல. கேர்ள்பிரண்ட் மட்டும் தான்.” பைப்பை திருகிக்கொண்டே இளித்தார் பிளம்பர்.


“கேர்ள்பிரண்ட்டா?” காலேதும் பின்னால் இருக்கும் கணேஷை பார்த்து, “பாத்தியா? இந்த வயசுல இந்த ஆளு எப்படி பேசுறான்னு?” என்பது போல சிரித்தார்.


“அய்யா!” என்று பிளம்பர் ஊளையிட்டார். சிதறி கிடக்கும் பொருட்களில் விறுவிறுவென எதையோ தேடினார்.


“என்ன ஆச்சு?”


“ச்ச்!” குழாய் அருகே முகத்தை எடுத்துச்சென்று உற்று பார்த்தார். பின்னர் பொருட்களை மீண்டும் துழாவினார். “போச்சுடா! ஏதோ பார்ட் இல்லைன்னு சொல்லி இன்னொரு நாள் வர போறானா? லலிதா வேற கத்துவாளே!” என்று கணேஷ் யோசிக்க துவங்கினார்.


சட்டென்று கண்ணில் ஏதோ பட்டது போல் ஒரு போல்ட்டை எடுத்தார்.


“எனக்கு ஃபாஸ்ட் பண்ணாமலே கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது” மறுபடியும் காலேதை பார்த்து சிரித்தார்.


“ஃபாஸ்ட் பண்ணா கண்ணு தெரியாதுன்னு யாரு சொன்னா? ஃபாஸ்ட் பண்ணி பாருலா! உனக்கு சக்தி கொடுக்கும் தெரியுமா? உடல் பலம் மட்டும் இல்ல. உன்னோட ஆத்மாவும் சக்தியாகும். உண்மை தான். உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் கணேஷ்?”


கணேஷ் காலேதின் தோளை தாண்டி பிளம்பர் உள்ளே என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்று எட்டிப்பார்ப்பதில் மும்முரமாக இருந்தார். அதனால் காலேதின் திடீர் கேள்விக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.


பிளம்பர் சந்தேகத்துடன் காலேதை பார்த்தார்.


“ஆமாலா. உன் ஆத்மா சக்தி ஆகும். இங்கேர்ந்தே நான் என் அம்மா கூட பேசலாம் தெரியுமா? என் அம்மா கே.எல்ல இருக்காங்க. ஆனா நான் ஃபாஸ்ட் பன்னா அவங்களோட நான் பேசலாம். சும்மா சொல்லல. அது நான் உணர்ந்திருக்கேன். ஃபோன்ல இல்ல. மனசு வழியா.”


“வாஹ்! ரீலி ஆ?”


“ஃபாஸ்ட் பண்ணுறது மூலமா நீ சுத்தம் ஆகுற. சுத்தம் ஆகும் போது எல்லாமே செய்யலாம்.”


“உன் அம்மாவும் ஃபாஸ்ட் பண்ணுவாங்களா?”


“ம்ம்”


“இவங்க? இந்த ஐ.எஸ் க்ரூப். அவங்களும் பாஸ்ட் பண்ணுவாங்களா?”


“ஐ.எஸ்ஸா?! அவனுங்கெல்லாம் முஸ்லிம்ஸ்ஸே கெடையாதுலா. பயித்தியக்கார பசங்க! உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் கணேஷ்? மக்கள ஆத்துல இறக்கி... அப்படியே கழுத்த வெட்டி கொல்லுறாங்க. இதெல்லாம் இஸ்லாமே கெடையாது! இஸ்லாம் ஓட அஞ்சு பில்லர்ஸ் என்ன தெரியுமா? ஒன்னு ஃபாஸ்டிங். இன்னொன்னு தானம். மூணாவது...”


சற்று யோசித்தார். அதற்குள் பிளம்பர் காலேதை கூப்பிட்டார்.


“ஃபிளஷ் ரெடி! பாருங்க!”


காலேத் உடனே கழிவறைக்குள் சென்று ஒரு முறை ஃபிளஷ் அழுத்தி பார்த்தார்.


“வாங்க மிஸ்டர் கணேஷ். நீங்களும் ஒரு வாட்டி செக் பண்ணிடுங்க.”


கணேஷும் ஒரு முறை முயற்சித்தார். ஃபிளஷ் ஆனதும் தண்ணீர் மீண்டும் ரொம்பும் சத்தம் கேட்டது. “பாத்தீங்களா? தண்ணி கரெக்டா திரும்ப ரொம்புது. எல்லாம் ஓக்கே!”


கணேஷும் சரி என்றார். பிளம்பர் மின்னல் வேகத்தில் சிதறி கிடந்த அனைத்து பொருட்களையும் பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்பினார், “நான் கீழ வெயிட் பண்ணுறேன்” என்று காலேதிடம் சொல்லிவிட்டு.


“சந்தோஷமா மிஸ்டர் கணேஷ்? ஃபிளஷ் சரி பண்ணியாச்சு! முதல் மாசத்துல வீட்டுல வேற ஏதாச்சும் பிரச்சனை வந்தாலும் சொல்லுங்க. கண்டிப்பா பாக்கறேன்.”


“தாங்க்ஸ். ஹேப்பி ஹரி ராயா!” கணேஷ் வாசல் கிரில் கதவை மூடினார்.


“எனக்கு ஹரி ராயா உண்டான்னு தெரியல. முதல்ல வீட்டுக்கு போய் சாப்பிடணும்! எனிவே தேங்க்யூ மிஸ்டர் கணேஷ்!” ஷூவை அணிந்த பிறகு, “பூட்டிக்கோங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.


***


கணேஷ் படுக்கையறை கதவை திறந்தார்.


“போயிட்டானா அந்த ஆளு?”


“ம்ம்”


“பிளஷ் ஓக்கேவா?”


“ம்ம்”


“சரி நான் சாப்பாடு எடுத்து வெக்கறேன். நீ தட்டு எடு.”


கணேஷ் தட்டு எடுக்க சமையல் அறைக்குள் நுழைந்தார். கோணல்மாணலாக டேப் ஒட்டப்பட்டிருந்த டிராயர் அவர் கண்ணில் பட்டது. அவரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

***

டீஸண்ட்டா ஒரு டிஸ்ப்ளே பிக்

“நீங்க ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? ஒரு கும்பலோட சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோவ பார்க்கும் போது, உங்க கண்ணு முதல்ல எங்க போகும்? நாம எப்படி நிக்கறோம், எப்படி சிரிக்கறோம், எப்படி தெரியறோம்… இதை எல்லாம் நோட்டம் விட்டுட்டு தான், நாம போட்டோல இருக்கற மத்தவங்களையே பாப்போம்! சரி தானே?”



எட்டாம் வகுப்பில் ஆசிரியர் “ஈகோ” பற்றி கொடுத்த பேச்சிலிருந்து ஒரு துணுக்கு சங்கரின் காதில் ஒலித்தது. எட்டாவது வகுப்பும், ஈகோவை பற்றிய கட்டுரையும் அவன் முடித்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும், அன்று எதிர்பார்ப்புடன் அவன் பேஸ்புக்கை தடவி கொண்டிருந்த போது, மனதில் இந்த வரிகள் ஓடின. அவனின் நண்பன் புதிதாக ஒரு ஆல்பம் நிறைய புகைப்படங்கள் போட்டிருந்தான். அதில் தான் மட்டும் இருக்கிறாப்பல எதாச்சும் போட்டோ சிக்கினா, உடனே டிஸ்ப்ளே பிக் ஆக்கிடலாம் என்ற நப்பாசையில் தேடி கொண்டிருந்தான்.


சங்கருக்கு இது தான் பிரச்சனை.


“எனக்கு ஒரு நல்ல டிஸ்ப்ளே பிக் இல்ல மச்சி!”


“உனக்கு எந்த மாதிரி வேணும் சொல்லு…” கையில் டீ.எஸ்.எல்.ஆர் காமிரா வைத்திருந்த ஒரு நண்பன் கேட்டான்.


“நல்லா இருக்கணும்டா”


“டேய்! எல்லாரும் பின்ன என்ன கேவலமாவா பிக் வெச்சிருக்காங்க? எந்த வெரைட்டி சொல்லு… ஸ்டைல் ஆ இல்ல ரொமாண்டிக் ஆ இல்ல கோவம் ஆ...”


“பொண்ணுங்க பாத்துட்டு பயப்பட கூடாது. டீசன்ட்டா இருக்கணும்.”


நண்பன் கன்னத்தில் மீதமிருந்த முடியை சொரிந்தான். “அழகா அம்சமா ஒரு படம் வேணும் உனக்கு. சரி அந்த பக்கம் பாரு…”, காமிராவை கண் அருகே எடுத்து சென்று, லென்ஸை சுழட்டியப்படி பேசினான் நண்பன்.


“தூரத்துல எதையோ தேடுற மாதிரி பாருடா… கன்னத்துல கை வை… ஆன்ன் அப்படி தான்… அப்படியே ஆழமா எதையோ யோசிக்கற மாதிரி… சூப்பர்!”


கிளிக்! கிளிக்!


சங்கருக்கு எதிலும் திருப்தி இல்லை.


ஒரு நீண்ட ரயிலின் பெட்டிகள் வளைந்திருக்க, அதில் நட்ட நடுவில் இருக்கும் பெட்டியிலிருந்து கூலிங் கிளாஸ் அணிந்தப்படி காமிராவை எட்டி பார்க்கும் முகம். லேசாக ஒரு புன்னகை. 136 லைக்.


வலது பக்கத்திலிருந்து ஒரு டேபிள் லாம்ப்பின் ஒளி கீற்றுகள் முகத்தில் பட, ஒரு சோபாவின் மீது முழங்கையை வைத்தப்படி காமிராவை பார்க்கும் முகம். போட்டோவில் வெளிச்சம் பெருக்க பட்டதால், அந்த நபரின் கருப்பு நிறமும் சற்று வெளுத்தவாறு இருந்தது. 101 லைக்.


குளிர் பிரதேசத்தில் அணியும் மப்ளர். கருப்பு ஜாக்கெட். பிரெஞ்சு பியர்ட். நேராக காமிராவை பார்க்காமல் சைடு வாங்கி பக்கத்தில் வேறொரு காமிராவை பார்க்கும் முகம். தோல் மீது இன்னொரு ஆளின் கை. அந்த ஆள் போட்டோவிலிருந்து அகற்றபட்டிருந்தான். 97 லைக்.


தொப்பிகள் விற்கும் கடையில், ஏதோ ஒரு தொப்பியை அணிந்து, தலையை சற்று குனிந்து, ஒரு புருவைத்தை மட்டும் உயர்த்தி காமிராவை குறும்பான ஒரு சிரிப்புடன் பார்க்கும் முகம். அந்த உயர்த்திய புருவத்திற்கு 112 லைக்.


சங்கரின் டிஸ்ப்ளே  பிக் - அண்ணாமலை படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெள்ளையாக புகை விடும் படம். 34 லைக். அதுவும் அவனுக்கு வந்ததில்லை. சூப்பர்ஸ்டாருக்கு வந்தது தான் என்று சங்கருக்கு தெரியும்.


சங்கரும் எவ்வளவோ முயற்சித்து பார்த்துவிட்டான். நண்பர்களின் பிறந்த நாள் விழா, படம் பார்க்க செல்லும் அவுட்டிங், கிரிக்கெட் விளையாடும் பொழுது. எல்லாமே முயற்சித்து விட்டான். சிக்கவில்லை. புகைப்படம் எடுப்பவர்கள் ஏனோ சங்கரை மட்டும் விட்டுவிடுவார்கள்.


ஒரு நாள் ஒரு பாட்டு கச்சேரிக்கு சென்றிருந்த போது பார்வையாளர்களை புகைப்படம் பிடித்தவன், சங்கரை மிக அழகாக படம் பிடித்திருந்தான். வெளிச்சம் அவன் மீது கொஞ்சம் மங்கலாக விழுந்து ஒரு வித பொலிவுடன் அவன் முகத்தை காட்டியது.


“அடடே! நானா இது?” என்று ஒரு வினாடி வியந்து போனான். பிறகு சோகத்தில் ஆழ்ந்தான். புகைப்படம் எடுத்தவன் அவனுக்கு ஆகாதவன். இப்போது அதை டிஸ்ப்ளே பிக் ஆக்கினால், அவனின் திறமையை அங்கீகரிப்பது போல ஆகி விடுமே. அவனுக்கு நன்றிகளும் சொல்ல வேண்டி இருக்கும். அந்த பொழப்புக்கு டிஸ்ப்ளே பிக் இல்லாமலே இருக்கலாம் என்று முடிவு செய்தான்.


இரண்டு வாரங்களுக்கு பின், எல்லா இளைஞர்களுக்கும் ஏதோ ஒரு நாள் ஏற்படும் அந்த துயரமும் சங்கருக்கு நேர்ந்தது. ஏதோ ஒரு பாட்டு கேட்டப்படி ஏகாந்தமாக எஸ்க்கலேட்டரில் ஏறிச்செல்கையில், யாரோ அவனின் முதுகை தட்டினார்கள். திரும்பி பார்த்தால் ஒரு இளைஞன். யார் என்று தெரியவில்லை. காதிலிருந்து இசை அருவியை பிரித்தான் சங்கர். அந்த இளைஞன் உடனே, “அங்கிள்! இவ அழகா இருக்கா தானே?” என்று கேட்டப்படி அவன் பின்னே நிற்கும் பெண்ணை சுட்டிக்காட்டினான். அந்த பெண் வெட்கப்பட்டுக்கொண்டு அந்த இளைஞனின் தோளை தட்டினாள்.


சங்கருக்கு புரியவில்லை. முழித்தான். “சாரி?” என்றது அவன் வாய் தானாக. “இந்த பொண்ணு அழகா இருக்கா தானே அங்கிள்?” என்று அந்த இளைஞன் மறுபடியும் குத்தினான்.


“ஆ...மா...” என்று பிதற்றினான் சங்கர்.


“தேங்க்ஸ்!” டப்பென்று அந்த இளைஞன் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி அவளுடன் பெசத்தொடங்கிவிட்டான். அந்த பெண் வெட்க்கப்பட்டு அந்த இளைஞனின் தோளில் குத்தினாள். சங்கர் மெதுவாக திரும்பி காதில் இசை அருவியை மீண்டும் இணைத்துக்கொண்டான். ஆனால் அவனுக்கு சங்கீதம் கேட்கவில்லை. “அங்கிள்… அங்கிள்… அங்கிள்…” என்ற ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்தது.


“அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்விய கேட்ட? நான் உனக்கு பார்க்க அங்கிள் மாதிரியா இருக்கேன்? டேய்! உன்ன விட எனக்கு வயசு கம்மியா இருக்கும்டா… எத வெச்சு அவன் நம்மள அங்கிள்னு எடை போட்டான்?”


தன்னை மேலும் கீழும் பார்த்து கொண்டான் சங்கர். அவனுக்கு புலப்படவில்லை.


“நம்ம முகத்துலயே இருக்கோ?”


தனக்கு இருப்பத்தி நான்கு வயது தான் ஆகிறது என்றபோது திடுக்கிட்டுப்போன சக ஊழியரின் முகம் சங்கருக்கு நினைவு வந்தது.


அடுத்த நாள் சங்கர் முஸ்தப்பா கடையில் ஜீன்ஸ் பிரிவில் அலைந்துகொண்டிருந்தான். அடுத்து கூலிங் கிளாஸ் பிரிவில் அரை மணி நேரம். அடுத்து காலணிகள் பிரிவில் 20 ஜோடி ஷூக்கள் அணியப்பட்டு புறக்கணிக்க பட்டன. எல்லாம் முடிந்து, ட்ரயல் ரூமை விட்டு வெளியே வந்த சங்கர், பாட்ஷா ரஜினி போல இடுப்பில் கை வைத்துக்கொண்டு வாசலில் நின்றான்.


“இப்போ வாங்கடா! எவனாச்சும் வந்து அங்கிள்னு சொல்லிப்பாருங்க...”


அவனுக்கு அடுத்து ஒரு சிறுமி உள்ளே செல்ல காத்திருந்தாள். இரண்டு மூன்று சட்டைகளுடன் அந்த சிறுமியின் அம்மா அருகில் நின்றிருந்தாள். வெளியே வந்த சங்கரை பார்த்தவுடன், அந்த அம்மா தனது மகளிடம், “பாப்பா! வழி விடுங்க. அங்கிள் போகட்டும்.” என்றாள்.


வானில் இடி இடித்தது. கொட்டும் மழையில் நனைவது கூட தெரியாமல், எம்.ஆர்.டி ஸ்டேஷனுக்கு நடந்தான். ரயில் பயணம் முழுக்க மூடிய கதவில் சாய்ந்தப்படி, வானின் கருமேகங்களை பார்த்தப்படி பயணித்தான். மழை ரயிலின் கண்ணாடி ஜன்னலில் கண்ணீர் துளிகள் போல வழிந்தது.


கைபேசியை மெதுவாக வெளியே எடுத்தான். பேஸ்புக்கில் தன்னுடைய பழைய படங்களை மீண்டும் பரிசீலித்தான். “அங்கிள்” என்று தோன்றிய படங்களை, எவ்வளவு லைக் வந்திருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நீக்கினான். ஆனால் இன்னும் டிஸ்ப்ளே பிக்கில் ரஜினி வெள்ளை புகை கக்கி கொண்டிருந்தார்.


“எது நமக்கு தேவையோ அதை கடவுள் கொடுப்பார். எது அவர் நமக்கு கொடுக்கவில்லையோ, அது நமக்கு தேவையில்லை.” பேராசையை பற்றி எட்டாம் வகுப்பு ஆசிரியர் கூறிய வரிகள். இவ்வரிகள் நினைவுக்கு வந்தாலும், சங்கரின் மனம் அமைதிக்கொள்ளவில்லை.


“மழை காரணமாக ரயில் சற்று மெதுவாக செல்லும். உங்கள் புரிதலுக்கு நன்றி.” என்ற யந்திர குரல் சங்கரை மீண்டும் பூமிக்கு கொண்டுவந்தது. உட்கார இடம் இருக்குமா என்று சுத்தி பார்த்தான்.


அப்போது தான் அந்த சீன தம்பதியை கவனித்தான். பார்பதற்கு கணவன் மனைவி போல இல்லாமல், அப்பா மகள் போல இருந்தாலும், ஒரு வித “கெமிஸ்ட்ரி” அவர்களுக்குள் இருந்தது. அந்த ஆணுக்கு வெள்ளை தலைமுடி, ஆனால் சுறுசுறுப்பான உடல் பாவனை. அந்த பெண்ணோ டை அடித்திருந்தாள். இருவரும் தலைகளை இணைத்து, பல கோணங்களில் செல்பீ எடுத்துக்கொண்டிருந்தனர். எடுத்தப்பின் அந்த படங்களை அவர்களே பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.


அப்போது அந்த தம்பதி எதிரில் அமர்ந்திருந்த ஒரு முதியவள், எழுந்து, அந்த கணவனுக்கு இடம் அளித்தாள். அந்த கணவன் அதை ஏற்றுகொள்ளவில்லை. “எனக்கு எதுக்கு முதியவர் சீட்டு?” என்று அவர் மறுத்துவிட்டார். சில வினாடிகளுக்கு பின், அவர் முகம் மாறியது. அந்த முதியவள் ஏன் அவருக்கு சீட்டு கொடுக்க எழுந்தாள் என்று அவருக்கு மெதுவாக புரியத் தொடங்கியது. அதை பொருட்படுத்தாமல் அவர் செல்பீ எடுப்பதை தொடர்ந்தார்.


சங்கர் மனதில் ஒரு திடீர் புரிதல், மின்னல் போல பாய்ந்தது. அந்த மின்னல் ரயிலையும் தாக்கியது போல. உடனடியாக நின்றது. ரயிலிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். நகராமல் அப்படியே நின்றது ரயில். பிறகு சடாரென்று ரயிலுள்ளே இருக்கும் விளக்குகளும் அணைந்து போயின. தூரத்தில் யாரோ ஒரு பெண் கூச்சலிட்டாள். அவசர நேர விளக்குகள் மினுமினுத்து எரிந்தன. மழை இடியுடன் ரயில் கதவுகளை அடித்துக்கொண்டிருந்தது.


அந்த விளக்கொளியில், சங்கர் எதிரே இருக்கும் கண்ணாடி கதவில் முதல் முறையாக தனது பிம்பத்தை பார்த்தான்.


மடக்கென்று கைபேசியில் காமிராவை திறந்தான். தனது பிம்பம் தெரிவது போல ஒரு பிரேம் வைத்தான். படம் எடுக்க கட்டை விரலால் பொத்தானை அழுத்த செல்லும் நொடியில், ஒரு மின்னல் வானில் பரவியது. கிளிக்!

***

July 10, 2016

ஜன்னல்


“திரும்ப எரிக்க ஆரமிச்சுட்டாங்களா?” தனது மூக்கிற்கு கருகிய பேப்பர் வாடை வருவதை உணர்ந்த ராஜி விறுவிறுவென ஜன்னலை நோக்கி நடந்தாள். வெளியே எட்டிப்பார்த்தாள். இரண்டாவது தளத்தில் இருக்கும் அவள் வீட்டு ஜன்னலுக்கு கீழ், புல்வெளியில் சாம்பல் நிற தகர டிரம் ஒன்றில், தீ ததும்பியது. அதற்கு எழுத்துக்கள் பொதிந்த சதுர காகிதங்களை இறையாய் அளித்துக்கொண்டிருந்தார், அரை கால் சட்டை அணிந்த ஒரு சீன முதியவர்.


“எதுக்கும்மா பேப்பர் கொளுத்தறாரு அந்த தாத்தா?” ஜன்னல் அருகில் இருக்கும் நாற்காலியில் முழங்காலிட்டு முகத்தை கிரில் மீது சாய்த்து கேட்டாள் சிறுமி அக்ஷரா.


“எதுக்கோ எரிக்கறாங்க!” ஜன்னலை மூடி தாழிட்டு, கிட்சனுக்கு திரும்பினாள் ராஜி. ஞாயிற்றுக்கிழமையன்று கூடவா வீட்டில் நிம்மதியாக இருக்க முடியாது என்ற எரிச்சல். மூடிய ஜன்னல் கண்ணாடி வழியாக அக்ஷரா அந்த தாத்தாவையும், கொழுந்து விட்டு எரியும் நெருப்பையும் பார்த்தாள். நெருப்பிலிருந்து வெளிவரும் கருப்பு புகையை அவள் கண்கள் பின் தொடர்ந்தன. அந்த புகை மேலே மேலே எழ, எவ்வளவு தூரம் அதை பார்க்க முடிகிறது என்று ஜன்னலோடு மூக்கை ஒட்டி முயற்சித்தாள்.


“அக்ஷரா! இங்க வா. வடை ரெடி!”


மூன்று நொடிகளில் தாவி வந்து கிட்சன் மேசை மீது உட்கார்ந்தாள் அக்ஷரா. முறுவலான வடை ராஜி கையில் இருந்த கரண்டியிலிருந்து, பூக்கள் படம் பொதிந்த வெள்ளை பீங்கான் தட்டில் விழுந்தது.


“வடைல ஏன் மா ஓட்டை இருக்கு?” ஆவி பறக்கும் வடையை தொட முடியாமல், நடுவில் இருக்கும் ஓட்டையில் விரல் விட்டப்படி அக்ஷரா கேட்டாள்.


***


மூடிய ஜன்னலுக்கு முன் இக்கியாவிலிருந்து வாங்கிய வெள்ளை மேசை, வெள்ளை நாற்காலி. மேசை மீது திறந்திருக்கும் லெனோவோ லேப்டாப். நாற்காலியில் ராஜி. அவள் காதில் மொபைல்.


“ஹல்லோ சிஸ்! எழுத ஆரமிச்சுட்டீங்களா?”


“இப்போ தான் ஒரு ஐடியா வந்திருக்கு. அத டெவெலப் பண்ணிட்டு இருக்கேன்.” என்றது மறுமுனையிலிருந்து ஒரு பெண் குரல்.


“6000 வார்த்தைகள் எப்படி எழுத போறேன்னு நினைச்சாலே பயமா இருக்கு!” என்றாள் ராஜி.


“டெய்லி கொஞ்சம் எழுதுங்க. செஞ்சுடலாம் சிஸ்.” என்றாள் உமா.


இரண்டு வாரம் முன்னர், இந்த குறுநாவல் போட்டி பற்றி ராஜிக்கு தெரிவித்தவள் தான் உமா. இருவரும் வளர்ந்து வரும் சிறுகதை ஆசிரியர்கள் என்று மூத்த நாவலாசிரியர் ஒருவர் வாசகர் வட்ட சந்திப்பில் கூறினார். அதை கேட்டப்பின்னர் இருவரும் மாறி மாறி “கங்க்ராட்ஸ் சிஸ்!” என்று பாராட்டிவிட்டு, இன்னும் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.


“எந்த கதை கருவும் இன்னும் சிக்கல… நீங்க போன வாட்டி எழுதின அந்த ரெட்டை நிலா கதை சூப்பரா இருந்துச்சு உமா. முக்கியமா அந்த பாட்டி கேரக்டர்...”


ராஜி பேசியப்படி நாற்காலியிலிருந்து எழுந்து ஜன்னலை திறக்கலாமா என்று பார்த்தாள். வெளியே நெருப்பு இன்னும் எரிந்துக்கொண்டிருந்தது. சிறு சிறு காகித துகழ்கள் காற்றில் மிதந்து கொண்டிருந்தன.


“என் ஊர்ல ஒரு பாட்டி அப்படி தான் இருப்பாங்க. அவங்கள மனசுல வெச்சு தான் எழுதினேன்.”


“என்னோட போன கதைக்கு சார் குடுத்த விமர்சனம் வேற இன்னும் அப்படியே மனசுல நிக்குது. அது எப்படின்னு தெரியல, கதை எழுத ஆரமிச்சாலே சொந்த ஊரு விஷயங்கள் எப்படியோ உள்ள வந்துடுது.”


“கவலை படாதீங்க ராஜி. ஒரு நல்ல சிங்கப்பூர் சார்ந்த குறுநாவல் நீங்க எழுதுவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு.”


ராஜி புன்னகைத்தாள். லேப்டாப் திரையில் அவள் வர்ட் டாகுமெண்டில் போட்டிருந்த 5 புள்ளி பட்டியலை பார்த்தாள்.


  1. புட் கோர்ட்டில் டேபிள் சுத்தம் செய்யும் சீன பெண்
  2. ஊருக்கு பணம் அனுப்ப நினைக்கும் கட்டட தொழிலாளி
  3. முதிய டேக்ஸி ஓட்டுனரும் அவரின் உடல் நலம் இல்லா மனைவியும்
  4. முதிய டேக்ஸி ஓட்டுனரும் தனிக்குடித்தனம் இருக்கும் அவரின் மகனும்
  5. கொடுமைகளை அனுபவிக்கும் பிலிப்பினோ மெயிட்


இவை தான் தற்பொழுது ராஜியிடமிருந்த குறுநாவல் கருக்கள்.


குத்துமதிப்பாக பத்து கதைகள் போட்டிகளுக்காக எழுதியிருப்பாள் ராஜி. இரண்டு மூன்று கதைகளில் அவளுக்கு திருப்தி. மற்றவை காலக்கெடு கருதி கிறுக்கியவை. அந்த பத்து கதைகளுக்கு பல விமர்சனங்கள்.


முக்கியமாக அவள் மனதை உருத்திய விமர்சனங்கள் இரண்டு. “அது ஏன் குடும்பத்த சுத்தியே உங்க கதை வருது?” மற்றும் “உங்க கதைல சிங்கப்பூர் சூழல் புகுத்தின மாதிரி இருக்கு. ஊர்லேர்ந்து வந்து எழுதுற ஒருத்தங்கன்னு ஈசியா சொல்லிட முடியும்!”


ராஜிக்கும் சமூகத்தை பற்றி எழுத ஆசை தான். ஜெயமோகன் வலைத்தளத்தில் வரும் கட்டுரைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். முயர்ச்சித்தும் பார்த்தாள். “ஒரு அகதியின் கதை” எழுதியபோது வந்த விமர்சனம், “பிரச்சார நெடி மூக்கை துளைக்கிறது. கதையில் கட்டுரையை தவிர்க்கலாம்”


அதன் பிறகு சமூக கதை பக்கமே ராஜி போகவில்லை. ஓரிரு முறை வளவளவென எழுதும் போது, “யேய்! கட்டுரை கட்டுரை” என்று தனக்குத்தானே எச்சரித்துகொண்டாள்.


“ஓக்கே உமா. நான் இப்போ எழுத ட்ரை பண்ணுறேன். உங்க ஊக்கத்துக்கு நன்றி. பை!”


அக்ஷரா தூங்கிகொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் மீதம் இருந்தது. அதன் பிறகு அவள் ஹோம்வர்க் பார்க்க வேண்டும். நண்பர்களை சந்திக்க வெளியே சென்ற கணவரும் வந்துவிடுவார். இந்த ஒரு மணி நேரத்தில் ஒரு பத்தியாவது எழுதிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.


உமாவின் எழுதும் வேகத்தை நினைத்து ராஜி பிரம்மித்ததுண்டு. ஒரு நாள் கதையின் ஒரு லைன் ரெடி என்பாள். மறு நாளே பாதி கதை எழுதிமுடித்துவிடுவாள். இன்னும் 2 நாட்களில் மீதி கதையும் எழுதி, ஒரு முறை எடிட்டிங்கும் செய்து விடுவாள்.


“நமக்கு ஏன் அப்படி வரமாட்டேங்குது?” என்று ராஜி யோசித்ததுண்டு. அவள் எழுதியதை விட, லேப்டாப் திரையின் முன் அமர்ந்து யோசித்தது தான் அதிகம்.


எதிர் புளோக் ஜன்னலில் ஆள் நடமாட்டம் தெரிந்தது. சிகப்பு சட்டை அணிந்த மூதாட்டி ஜன்னல் அருகே வந்து நின்றாள். ராஜியின் எதிர் புளோக் சுமார் 50 அடி தொலைவில் இருக்கும். மூதாட்டியின் முகம் தெளிவாக தெரியாவிட்டாலும், ராஜி பல முறை அவரை கவனித்திருக்கிறாள். தினம் சாயங்காலம் ஆனால், ஜன்னல் அருகே வந்து நின்று விடுவாள். ஜன்னல் வழியாக அந்த மூதாட்டி எதை பார்க்கிறாள் என்று தெளிவாக சொல்ல முடியாது. விளையாட்டு கார்னரில் விளையாடும் குழந்தைகளை பார்க்கிறாளா? இரு புளோக்கிற்கும் நடுவில் வளர்ந்திருக்கும் மரத்தை பார்க்கிறாளா?


இருட்ட ஆரம்பித்தவுடன் மூதாட்டி மீண்டும் உள்ளே சென்று விடுவாள். அந்த வீட்டில் அந்த மூதாட்டியை தவிர வேறு யாரையும் ராஜி பார்த்ததில்லை. இரவில் அவர் வீட்டில் விளக்கு எரியாது. சிகப்பு, மஞ்சள் - இந்த இரு வண்ணங்களில் தான் அவள் சட்டை அணிவாள்.


யார் இந்த மூதாட்டி? அவருக்கு பிள்ளைகள் இல்லையோ? பிறந்து இறந்திருப்பார்களோ? ஏன் சாயங்காலம் மட்டும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறார்? மற்ற நேரங்களில் ஏன் அவர் வீட்டில் விளக்கு எரிவதில்லை? அவருக்கு கணவர் இருப்பாரா? அவர் ஏன் ஜன்னலுக்கு வருவதில்லை? இப்படி பல கேள்விகள் ராஜியின் மனதில் ஏற்பட்டதுண்டு. திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.


வர்டில் 6 என்று ஒரு புது புள்ளி போட்டு, “ஜன்னல் வழியாக எதையோ தொலைத்தது போல் பார்க்கும் மூதாட்டி” என்று டைப் செய்தாள்.


அலாரம் அடித்தது. அட! ஒரு மணி நேரம் ஆகி விட்டதா? குறுநாவல கட்டி வெக்க வேண்டியது தான்.


***


அடுத்த நாள் திங்கட்கிழமை. காலையில் ஜன்னலை திறக்கலாம் என்று பார்த்தால், அப்போது தான் கீழே இருக்கும் புல்லை இருவர் வெட்டிக்கொண்டிருந்தனர். துணியை வைத்து முகமூடி போல அணிந்து கொண்டு, தோள்களுக்கு பின்னால் ஒரு மோட்டார் தொங்க, கையில் நீண்ட கம்பு, அதன் முனையில் விஷ்ணுவின் சக்கரம் போல வேகமாக சுழலும் தகடு. ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சப்தம் மூடிய ஜன்னல் வழியே கேட்டுக்கொண்டிருந்தது. சக்கிரத்தை வலதும் இடதும் அவர்கள் நகர்த்த, தேவைக்கு அதிகமாக வளர்ந்த புல் செடிகள், சிறுசிறு துண்டுகளாக காற்றில் தெறித்தன. பல தடவை பார்த்த காட்சி என்றாலும், அக்ஷரா அதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.


“அம்மா நானும் புல்லு வெட்டணும்!”


“நாளைக்கு வெட்டலாம் வா!” ஜன்னலை விட்டு நகர்ந்தாள் ராஜி. செய்ய வேலை இருந்தது.


“அவங்க பின்னாடி என்னமா தொங்குது?”


“இங்க ஓடியா! இன்னிக்கு பிரேக்பாஸ்ட் ஸ்பெஷல் பூரி! தெரியுமா?”


பூரி பொரித்து ஊட்டிவிட்டு, லஞ்சும் கட்டிக்கொடுத்துவிட்டு, ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு, கணவருக்கும் லஞ்ச் கட்டி டாட்டா காண்பித்துவிட்டு, மீண்டும் லேப்டாப் திரையின் முன் ராஜி. நேற்று எழுதிய ஆறு புள்ளிகளை பார்த்தாள். எதை தேர்ந்தெடுப்பதென்ற குழப்பம். குறுநாவல் போட்டியின் விதிமுறைகள் கேட்பதற்கு மிகவும் எளியவை. சிங்கப்பூர் சார்ந்த கதையாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 6000 வார்த்தைகள் இருக்க வேண்டும். இவ்விரு விதிகளும் ராஜிக்கு பனிக்கட்டிகளால் மூடப்பட்டு, உச்சி எங்கிருக்கிறது என்று தென்படாத மலைகள் போல காட்சியளித்தன.


சொந்த ஊரை பற்றி எழுத வேண்டும் என்றால் அவளுக்கு பீறிக்கொண்டு கதை வரும். யோசிக்கவே தேவை இல்லை. தண்ணி லாரி வந்தால் நெரிசலாகும் அவள் ஊர் வீதி, பக்கத்து வீட்டில் தங்கியிருந்த “சுருட்டு” தாத்தாவின் புலம்பல், நாடியம்மன் கோவில், விக் அணிந்த அந்த கோவில் பூசாரி, அம்மனுக்கு புடவை சாத்தியதும் கல்யாணம் நடந்த பவானி அக்கா… இப்படி ஒவ்வொரு விவரமும் டக்டக்கென கண் முன் தோன்றி மறையும். ஆனால் சிங்கப்பூர் என்று வந்து விட்டால், “சீனன்” என்று எழுதினால் அவள் கண் முன் ஒரு மங்கலான முகம் தான் தோன்றும். இது அவள் மனதை குடைந்து கொண்டே இருந்தது.


இந்நேரம் உமா கதை எழுதி முடிச்சிருப்பாங்க. நாம எழுதியே ஆகணுமா? பேசாம விட்டுடலாமே… யாரு என்ன கேக்க போரா? ஐயோ! சார் கேப்பாரே ஏன் எழுதலைன்னு. நான் வேற ஓப்பனா “குறுநாவல் தானே? எழுதிட்டா போச்சு!”ன்னு சொல்லிவெச்சுட்டேன். ஜுரம் அப்படின்னு சொல்லிடலாமா? ஏன் நமக்கு சிங்கப்பூர் கதை எழுதவே வர மாட்டேங்குது… எப்படி நாம சிங்கப்பூரோட அடிநாதத்தை தேடி பிடிக்கிறது?


திடீரென்று ஒரு ஆர்கெஸ்ட்ரா வாசிப்பது போல கேட்டது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். ஒரு கூட்டமே கீழே இருக்கும் திறந்த வெளியில் திரண்டிருந்தது. என்ன சம்பவம், எதை கொண்டாடுகிறார்கள், ஒன்றும் தெரியவில்லை. சீருடை அணிந்த பல ஆண்கள். ஸ்கர்ட் அணிந்த பல பெண்கள். குல்லா மற்றும் தொளதொள ஜிப்பாக்கள் போட்ட பல பெருசுகள். ட்ரம்ஸ், ட்ரம்பெட் மற்றும் ராஜிக்கு பெயர் தெரியாத பல இசைக்கருவிகள். இசைக்கேற்ப அனைவரும் மார்ச்ஃபாஸ்ட் போல சுற்றி சுற்றி நடந்தார்கள். இதை சுற்றி நின்று பார்க்கும் ஒரு கூட்டம்.


நடப்பவற்றை ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்த ராஜிக்கு, மார்ச்ஃபாஸ்ட் செய்த கும்பலில் இருந்த ஒரு பெண் தென்பட்டாள். அவளின் கல்லூரி பருவம் நினைவுக்கு வந்தது. எந்த கவலையுமில்லாமல் இதே போல மார்ச்ஃபாஸ்ட் செய்தபடி, அடித்த லூட்டியெல்லாம் நினைவுக்கு வந்தது.


இசை நின்றது. அந்த பெண் புன்னகைத்தப்படி மற்ற தோழிகளுக்கு ஹை-ஃபை கொடுத்தாள். அடுத்து எல்லோரும் சேர்ந்து ஒரு நீண்ட பேனரை தூக்கினார்கள். வேறொரு தாளம் இசைக்க துவங்கியது. இந்த பெண் மட்டும் மிக நேர்த்தியாக எல்லா அசைவுகளையும் செய்தாள். மற்றவர்கள் இயந்திரங்களாக அசைவது போலவும், இவள் மட்டும் தனித்துவமாக அசைவது போலவும் ராஜிக்கு தோன்றியது.


ராஜியும் மற்ற பெண்களும் பேனரை தூக்கினார்கள். அந்த மஞ்சள் பேனரில் கருப்பு நிறத்தில் பெரிய பெரிய எழுத்துக்கள் பொதிந்திருந்தன. தனது கையால் பேனரை பிடித்து தூக்கும் போது, எழுத்துக்கள் இன்னும் பெரிதாக ராஜிக்கு தெரிந்தன. அந்த எழுத்துக்களின் அர்த்தம் ராஜிக்கு புரியவில்லை. ஆனால் அந்த பேனரை தூக்கி ஆடினால் குதூகலமாக இருக்கும் என்றது அவள் மனம். ட்ரம்களின் இசைக்கு அவள் கால்கள் தானாய் அசைந்தன. அவளின் இரு புறத்திலும் அவளோடு ஆடும் மற்ற பெண்களை பார்த்தாள். அவர்கள் முகங்களிலும் புன்னகை ஒளிர்ந்தது. எதிரே அவர்களை நோக்கி நடனம் ஆடியபடி ஒரு ஆண் கூட்டம் வந்தது. ட்ரம்பெட் ஊதப்பட்டது. ஆடி வரும் ஆண்களில் ஒரு இளைஞன் மிடுக்காக இருந்தான். அவனின் கண்களை பார்த்தவுடன், ராஜிக்கு அவனுடன் ஆடவேண்டும் போல தோன்றியது. இசை மேளம் அடிக்க அடிக்க, பெண்களும் ஆண்களும் கலந்து ஆடினார்கள். ஜிப்பா அணிந்த ஒரு தாத்தாவின் தலையிலிருந்து குல்லா கீழே விழுந்தது. ராஜி சிரித்தாள். வெகுநாட்களுக்கு பிறகு சிரிப்பது போல தோன்றியது. அந்த சிரிப்பே வேறு யாரோ ஒருவரின் சிரிப்பு போல இருந்தது. இசையின் வேகம் கூடியது. தனது ஆட்டத்தின் வேகமும் கூடுகிறது என்று ராஜி உணர்ந்தாள். அவளின் உடல் காற்றை கட்டி அணைத்தது. இரு கைகளையும் நீட்டினாள். ஒரு பறவை வந்து அவள் கைகளை முத்தமிட்டது. அவளை சுற்றிலும் ஆட்டம். குதூகலம். சுழன்றாள். அவளின் ஸ்கர்ட்டும் சுழன்றது. ட்ரம்பெட் மீண்டும் முழங்கியது. டிராகன் பொம்மை ஒன்று வானில் பறந்தது. அதை பிடித்து ஆட்டும் குச்சி ராஜியின் கையில் இருந்தது. சுழற்றினாள். காற்றை கிழித்து கொண்டு டிராகன் ஆடியது. அனைவரும் அந்த டிராகனை நிமிர்ந்து பார்த்தனர். அந்த இளைஞனை நோக்கி டிராகனை பறக்க விட்டாள். அவன் ஒரு பூச்சண்டை அந்த டிராகனிடம் நீட்டினான். பூச்சண்டை தொட்டவுடன் டிராகனும் பூக்களாக உதிர்ந்து விழுந்தது. பூ மழையில்...


கதவு தட்டப்பட்டது. இசை நின்றது. ராஜி வீட்டிற்குள் இருந்தாள். தட்டப்பட்ட கதவை திறந்ததும், சிறிய களைப்புடன் ஸ்கூல் பேக்கை ஆட்டிக்கொண்டே, கையில் காலி தண்ணீர் பாட்டிலுடன் உள்ளே நுழைந்தாள் அக்ஷரா.


“அம்மா பசிக்குது… சாப்பிட என்ன இருக்கு?”


அப்போது தான் ராஜிக்கு தோன்றியது. திரும்பி ஜன்னல் வழியாக எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தாள். மூதாட்டி அங்கே நின்றிருந்தாள். நேராக ராஜியை உற்று பார்த்தப்படி. அவளின் பார்வையில் ஒரு வெற்றிடம். முதல் முறையாக மூதாட்டியின் முகம் தெளிவாக தெரிந்தது. பரிட்சயமான ஒரு முகம்… அந்த முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கண்ணாடி ஜன்னலில் தெரியும் ராஜியின் முக பிம்பம் மீதும் படர்ந்தன.


“அம்மா!! பசிக்குதும்மா!!”

***