February 19, 2014

பேரு வெக்கத் தெரியல

A short story I wrote for the Thangameen Short Story writing contest of February 2014 on the topic "முதல்".

“எங்க போனும் சார்?” என்று தமிழில் கேட்டார் டாக்ஸி ஓட்டுனர்.

அவசரமாகக் கதவை சாத்தியப்படி, “சீக்கிரம் நேஷனல் லைப்ரரிக்குப் போப்பா!” என்றான் ரவி.

“மீட்டருக்கு மேல போட்டுத் தருவீங்களா சார்?” தலையை சொரிந்தார் டாக்ஸி ஓட்டுனர்.

“கண்டிப்பா தரேன்ப்பா! நெட்ஸ் ஓகே தானே?” என்று பதைப்புடன் கேட்டான் ரவி, “கொஞ்சம் டக்குன்னு போ! எனக்கு அவார்ட் கொடுக்கறாங்க... வாங்க டயம் ஆச்சு!”

ஸ்டீரிங் வீலைத் திருப்பி, கியரை ஒரு பிடிப் பிடித்து, பிரேக்கை மிதித்தார் ஓட்டுனர். நேஷனல் லைப்ரரி வந்துவிட்டது. அணிந்திருந்தக் கோட்டை சரி செய்துக்கொண்டே, இறங்கி ஓட்டம் ஓடினான் ரவி. மண்டபத்தில் பதினேழாவது வரிசையில் அமர்ந்தான்.

“எத்தனப் பேருக்கு கொடுத்துட்டாங்க?” என்று பக்கத்தில் இருந்த பெரியவரைக் கேட்டான்.

“தெரியலப்பா!” சலித்துக்கொண்டார் பெரியவர். அவர் பெயர் இன்னும் வரவில்லைப் போலும், என்று நினைத்து ரவி இளித்தான்.

அடுத்து பல மணி நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தான். வரிசையாக நிறையபேர் அவார்ட் வாங்கி, எல்லோருக்கும் காட்டியப்படி, குடும்பத்துடன் ஆட்டம் ஆடிக்கொண்டே மண்டபத்திலிருந்து வெளியேறினர். கைகளை தட்டித் தட்டி வலிக்க ஆரம்பித்தது ரவிக்கு.

“நம்ம பேரு ஏன் இன்னும் வரல?” என்று யோசித்துக்கொண்டே, மேடையருகே கையில் புத்தகத்துடன் நின்றுக்கொண்டிருந்தவரை நெருங்கினான்.

“மேடம்! நான் இரண்டு மணி நேரமா வெயிட் பண்ணுறேன். இன்னும் எனக்கு அவார்ட் வரல. கொஞ்சம் பாத்து சொல்லுறீங்களா?”

அந்த மேடம் கையில் இருந்த புத்தகத்தை திறந்தப்படி, “உங்க பேரு?” என்று கேட்டார்.

“ரவி”

திறந்த புத்தகத்தை டபக்கென்று மூடினார் மேடம். “ரவியா?” லேசாக சிரிக்க ஆரம்பித்தார்.

ரவிக்கு புரியவில்லை. மேடம் விரலை சொடுக்கியதும் ஒரு பியூன் வந்தான். அவன் காதில் மேடம் ஏதோ கிசுகிசுக்க, பியூனும் சிரித்துக்கொண்டே ரவியை மண்டபத்தின் பின்புறம் கூட்டிச் சென்றான்.

“என்னப்பா நடக்குது இங்க? என்னோட அவார்ட் எங்க?”

“ரவிங்கற பேருக்கெல்லாம் அவார்ட் கிடையாது சார்.”

“ஏன்?”

பியூனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு கதவைத் திறந்தான். உள்ளே கும்மிருட்டு. ரவியை உள்ளே இழுத்தப்படி கதவை மூடினான். சில வினாடிகள் ரவியின் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பிறகு இருட்டுக்கு கண்கள் பழகி, எதிரே இருந்த காட்சியை பார்த்து அசந்துப் போனான். கோடிக்கணக்கான மக்கள் திரளாக அந்த இருட்டறையில் துளியசைவின்றி, ஜடம்போல் நின்றுக் கொண்டிருந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மக்கள். சிங்கப்பூர் அவ்வளோ பெரிய நாடு இல்லையே... எப்படி இவ்வளோ பேரு? அதுவும் நேஷனல் லைப்ரரிக்குள்ள... இங்க என்ன பண்ணுறாங்க?

அப்போது தான் அவன் கவனித்தான் அந்த கொடூரத்தை. அங்கிருந்த ஒருவருக்கும் முகம் இல்லை. கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் இருக்க வேண்டிய இடங்களில், காலியான பேப்பர் போல் வழவழ என்றிருந்தது. அதிர்ச்சியில் பியூனின் கையைப் பிடித்தான்.

“யாரு இவங்கெல்லாம்?”

பியூன் வலதுபுறம் கையை நீட்டி, தூரத்தில் இருந்த சில பேரை சுட்டிக்காட்டினான். “அதோ அந்த ஓரமா நிக்கறாங்க பாருங்க... அவங்க எல்லாம் ரவின்னு பேரு உள்ளவங்க. இந்த பக்கம் பச்சை சட்டை போட்டுக்கிட்டு நிக்கறவங்க எல்லாம் சுரேஷ். அவங்களுக்கு பக்கத்துல ரமேஷ். அந்த கோடியில ராமு, ராஜு அந்த வகேரா... இந்த கோடியில...ஏன்ப்பா உங்க பேரு என்னப்பா?”

தலை தொங்கி நின்றிருந்த நூறு பேர் நிமிர்ந்து, ஒன்றாக, “பாலு!” என்றனர்.

“ஆன்ன்... இந்த கோஷ்டியெல்லாம் பாலு..”

“ஏன் இவங்கெல்லாம் மண்டபத்துல இல்லாம, இந்த இருட்டறையில நிக்கறாங்க?” பதிலை சற்று யூகிக்க முடிந்ததால் ரவியின் மனசு பதபதைத்தது.

பியூன் நக்கலாக, “எதுக்கு நிக்கறாங்களா? ஆன்ன்... அவார்டு வாங்க!” என்றபடி சிரிக்க ஆரமித்தான். அந்த அறையின் நிசப்தத்தில் அவனின் சிரிப்பொலி எதிரொலித்தது. அந்த சிரிப்பைக் கேட்டு ரவிக்கு தலைச் சுற்றுவதுபோல் இருந்தது. தல்லாடியப்படி தலையில் கைவைத்தான்... முடியை காணவில்லை... திடுக்கிட்டு தன் முகத்தைத் தடவிப் பார்த்தான்... வழவழ என்றிருந்தது... அவனின் மூக்கு, கண்கள், வாய் அனைத்தும் மறைந்துவிட்டன... சுற்றிலும் கும்மிருட்டு...

***

திடுக்கிட்டு எழுந்தான் ரவி. நெற்றியெங்கும் வியர்வை. உடனே இடப்பக்கம் திரும்பி லதா இருக்கிறாளா என்று பார்த்தான். ரம்யமாக உறங்கிக்கொண்டு இருந்தாள். இதயம் மீண்டும் லேசாக அடிக்க ஆரமித்தவுடன், யோசித்தான். இன்றும் அதே வினோதமான கனவு... உறங்கிக்கொண்டிருந்த லதாவின் வயிற்றை பார்த்தான். ஆறு மாதம் கர்பம். “இன்னும் சில மாசம் தான் இருக்கு... என்ன செய்ய போறேன்னு தெரியலியே...”

ஒரு பயம் ரவியின் மனதை உலுக்கியது. ஸ்கூலில் படிக்கும் பொழுது யாரேனும் “ரவி!” என்று கத்தினால், உடனே திரும்பிப் பார்ப்பான். ஆனால் கடைசியில் அவர்கள் கூப்பிட்டது வேறு ஏதோ ஒரு ரவியாக இருக்கும். திரும்பியதால் ஏமாற்றம் தான் மிஞ்சும். இதைப் பார்த்த சில நண்பர்களின் சிரிப்பு, இன்னமும் ரவிக்குக் கேட்டுகொண்டிருந்தது. இப்போது லதாவின் வயிற்றில் அவளை போலவே அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த உயிருக்கும், அதே பிரச்சனை வந்து விடக்கூடாதே...

ரவி கடிகாரத்தை பார்த்தான். மணி காலை 6. மெத்தையிலிருந்து இறங்கி, மெதுவாக பாத்ரூமை நோக்கி நடந்தான். நூறு பேர் அடித்துப் போட்டார்ப்போல் ஒரு களைப்பு அவன் நடையில். அந்த களைப்பிற்கு காரணம் அவன் முப்பது வயதை தொட்டுவிட்டான் என்பதல்ல. அவன் கடந்த சில மாதங்களாகவே கடுமையான காலக்கெடுவுள்ள பன்னாட்டு கம்பெனியின் ப்ராஜெக்டில் வேலை செய்வதுப்போல், பிறக்கவிருக்கும் குழந்தையின் பெயர் தேடலில் போட்ட மிகுந்த உழைப்பு.

லைப்ரரிக்கு அலைந்து பெயர்கள் சம்மந்தமாக எக்கச்செக்கமான புத்தகங்கள் படித்தான். தமிழ் அறிஞர்களின் பேச்சுக்களை யூட்யூபில் பார்த்தான். வாசகர் வட்டங்கள் என்று தேடிப்போய் அறிவாளிகளிடம் பேசி ஆலோசனைக் கேட்டான். மதன் கார்கியின் ‘பெயரி’ என்ற பெயர் பரிந்துரைக்கும் மென்பொருள் கருவியிலும் தட்டிப் பார்த்தான். எதிலும் திருப்தி இல்லை. எல்லாமே எங்கேயோ கேட்ட பெயர்கள் போல இருந்தன. அல்லது கேட்பதற்கே நன்றாக இல்லாத பெயர்களாக இருந்தன.

“நீ உன் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தாய் என்று சொல்... நான் உன்னை பற்றி சொல்கிறேன்!” என்று அவனது சிறுவயதில், வரலாற்று ஆசிரியர் கூறியது ரவியின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வார்த்தைகளே தற்போது அவன் தோளில் பாரமாயின.

“உங்கள சுத்தி பாருங்க... சமூகத்துல பெரிய ஆளா கருதப்படுற யாரை வேனாச்சும் எடுத்துக்கோங்க. அவங்க பேரு நீங்க முன்னாடி கேட்ட பேரா?” வகுப்பில் மேஜை வரிசைகளுக்கு இடையே நடந்துக்கொண்டே கேட்பார் அந்த ஆசிரியர்.

“சங் நில உத்தமாவிலிருந்து லீ குவான் யூவரை எல்லோருக்கும் தனிவொரு ஸ்டைல் பேருல… பெயர் தான் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு விதை!” என்று அவர் சொல்ல, ரவி வாயை பிளந்தப்படி அவரையே பார்த்துக்கொண்டிருப்பான்.

“ச்சே! வரலாறு ஆசிரியர் மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா, நேரா அவர் கிட்டப்போய் பேரு ஒன்னு கேட்டிருப்பேனே”, என்று பாத்ரூம் கண்ணாடிமுன் நின்றப்படி மனதில் நினைத்துக்கொண்டான்.

அப்போது தனது பிம்பத்தில் அதை பார்த்தான். முதலில் நம்பிக்கை இல்லை. ஆனால் உற்று பார்க்கும் போது, பளிச்சிட்டது. கண்ணாடிக்கு மிக அருகில் சென்று, வலது கையால் இறந்துப்போன பல்லியை லாவகமாக எடுப்பதுப்போல், தலையிலிருந்து அதை எடுத்தான். ஆச்சரியமாக அதை பார்த்தான். முதல் வெள்ளை முடி!

***

கையில் இருந்த புத்தகத்தின் பக்கங்களை திருப்பி திருப்பி பார்த்தான் ரவி. ஏராளமான ஸ்டைல். எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம். குத்துமதிப்பாக நம்பர் எட்டை விரலால் சுட்டிக் காட்டினான். சலூனில் இருந்த பெண்மணி தலை ஆட்டியப்படி புத்தகத்தை ரவியிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

“ஆல்ஸோ ஹேர் டையிங் கேன் ஆ?” கண்ணாடியில் தெரியும் இரு வெள்ளை முடிகளைப் பார்த்தப்படி கேட்டான் ரவி.

“கேன்!” பாட்டிலில் இருந்து தலையில் தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தால் முடி வெட்டும் பெண்மணி.

“வணக்கம் ரவி!” என்றது ஒரு குரல். திரும்பி பார்த்தால், பக்கத்து சீட்டில் சிரிப்புடன் ப்ரொபஸர் கண்ணப்பன்.

“வணக்கம் சார்!”

எப்படி இருக்க, வீட்டில் எல்லோரும் எப்படி, வேலை எப்படி, ஊரில் எப்படி என்ற சிலபல எப்படிகளுக்குப்பின், ரவிக்கு ஒரு யோசனைத் தோன்றியது.

“சார்! எனக்கு பொறக்கப்போற கொழந்தைக்கு என்ன பேரு வெக்கறதுன்னு கொஞ்ச நாளாவே கொழப்பமா இருக்கு. பொத்தாம்பொதுவா இல்லாம கொஞ்சம் நல்லா இருக்கணும் சார். அப்போ தான் வாழ்கையில முன்னுக்கு வரமுடியுமுன்னு நெனக்கறேன். உங்களுக்கு எதாச்சும் அந்த மாதிரி தெரியுமா?”

“அருமையா சொன்னீங்கப் போங்க! பாராட்டுக்கள்! இப்போதைக்கு எதாச்சும் பேர் மனசுல வெச்சிருக்கீங்களா?” என்று கண்ணப்பன் கேட்டார்.

சில பேர் ஏழரை நாட்டு சனி என்று சொல்லுவார்கள். சில பேர் ஒரு ப்ளோவில் வார்த்தை வந்துவிட்டது என்று சொல்லுவார்கள். எதுவாக இருந்தாலும் கண்ணப்பனின் அந்த கேள்விக்கு, ரவி கூறிய பதில் அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. ஏதாச்சும் பதில் சொல்ல வேண்டுமே என்ற பதட்டத்தில், ரவி ஓரிரண்டு பெயர்களைக் கூற, அவை சமஸ்கிருத பெயர்களாகப்போக, கண்ணப்பனின் முகம் சுருண்டது. அவரோ தமிழ் பேராசிரியர் என்பது அப்போது தான் ரவியின் மண்டைக்குள் அடித்தது.

அடுத்த அரை மணி நேரம், கட்டிங் பெண்மணி ரவியின் தலைக்கு டை போட, கண்ணப்பன் ரவியின் காதுகளுக்கு தமிழ் மகிமையின் சாயத்தை பூசினார். ரவி தலையை கூட அசைக்க முடியாமல் கேட்கும் சூழ்நிலை.

***

டமார் என்று வீட்டு கதவை திறந்தான். வேகமாக நடந்து கம்ப்யூட்டர் அறையில் நுழைந்தான். லேப்டாப்பை திறந்து டமடமவென்று அடிக்க ஆரம்பித்தான். சத்தம் கேட்டு லதா அறைக்குள் வந்தாள்.

“என்னங்க! என்ன ஆச்சு?”

“ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு...” என்றபடி அடித்துக்கொண்டே இருந்தான் ரவி. சரியாக ஐந்து நிமிடங்களில் லேப்டாப்பை லதாவின் பக்கம் திருப்பினான். பெரிதாக எதுவும் இல்லை. ஒரு பக்கத்துக்கு ஏதோ எழுதியிருந்தான். லதாவிற்கு அதை படித்தவுடன் சிரிப்பு தாங்கவில்லை.

“என்னங்க இது?” என்று புன்னகையுடன் கேட்டாள்.

“ஒரு ப்ளாக் ஆரம்பிக்க போறேன்... நான் இது வரைக்கும் நம்ம குழந்தைக்கு பேரு வெக்க பட்ட கஷ்டம் எல்லாத்தையும் ஜாலியா எழுத போறேன்!”

அதுவரை சீரியஸா முகத்தை வைத்திருந்த ரவி, இதைக் கூறி விட்டு புன்னகைத்தான். லதாவும் புன்னகையுடன் லேப்டாப் திரையை பார்த்தாள்.

***

இரண்டு மாதங்கள் தவழ்ந்தன. ரவிக்கு இன்னும் தன் குழந்தைக்கு ஒரு பெயர் கிடைத்தப் பாடில்லை. ஆனால் 50 போஸ்டுகள் எழுதி முடித்திருந்தான் அவனின் ப்ளாகில். அமோகமான வரவேற்பு. ட்விட்டரில் பல பேர் மாற்றி மாற்றி கீச்சளிட்டு, கிட்டதட்ட 50,000 பேர் அவனின் ப்ளாகை படித்திருப்பதாக கூகிள் ரவிக்கு செய்தி சொன்னது.

அவனுக்கு நேர்ந்த பல சம்பவங்களை கிண்டலும் கேலியுமாக எழுதினான். குழந்தைக்கு பெயர் வைப்பதில் நடக்கும் அபத்தங்களை பற்றி எழுதினான். தாத்தாவின் பெயரையே வைத்துவிடு என்று பாட்டிகள் சொல்வதும், காதல் தோல்வி, கொள்கை மிகுந்த தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் இவை யாவும் எப்படி ஒன்றுமே தெரியாத ஒரு அப்பாவி ஜீவனின் தலையில் வந்து விழுகின்றன என்பதை பற்றியும் எழுதினான். அதுவும் ப்ரொபஸர் கண்ணப்பனுடன் நடந்த சம்பவத்தை அவன் சற்று மிகைபடுத்தி ப்ளாகில் போட்டக் கதை, மிக பிரபலமானது.

ட்விட்டரில் ‘பெயர் தேடும் ரவி’ எனும் அவன் ப்ரொபைலை, பல பேர் பின்ததொடர ஆரம்பித்தனர். வேலைக்கு அடிக்கடி லீவ் போடத் துவங்கினான். வீட்டில் உட்கார்ந்து எழுதுவதும், மனைவியை பார்த்துகொள்வதுமாக இருந்தான்.

***

இரண்டு வாரங்கள் கழித்து, ரவியின் கைபேசித் துடித்தது. அவனின் நண்பன் லீ. சோம்பல் முறித்துவிட்டு கைபேசியை எடுத்தான் ரவி. லீ அதீத மகிழ்ச்சியில் கீச் குரலில் பேசினான். அவனைச் சற்று சாந்தமாகச் சொல்லி என்ன விஷயம் என்று கேட்டான் ரவி.

“நீ சிங்கப்பூருல ஐ.எஸ் மேகஸீன் கேள்விப் பட்டிருக்கியா? அவங்க உன்னோட ப்ளாகை இந்த வருஷத்தோட சிறந்த நகைச்சுவை ப்ளாக்ன்னு தேர்ந்தெடுத்திருக்காங்கடா!” என்றான்.

ரவி லீயின் வசனத்தை ஜீரணிக்க சிறிது அவகாசம் ஆனது. பிறகு அவனும் கீச்சலிட்டான்.

“என்னடா சொல்லுற?! என்னதுடா இது…! அது பேரு என்ன சொன்ன?... ஐ.எஸ் மேகஸீன்… கேள்வி பட்டதே இல்லியே...”

“எனக்கு மட்டும் தெரியுமா என்ன… வருஷக்கடைசி ஆனதுனால இந்த வருஷத்தோட சிறந்த புத்தகம், சிறந்த உணவகம், சிறந்த ப்ளாக் அப்படின்னு தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்கறாங்க போல...”

“உனக்கு எப்படி தெரிய வந்துச்சு?”

“ட்விட்டர் போய் பாருடா டக்குனு… அடுத்த வாரம் ஏதோ விழாவுக்கு உன்ன கூப்பிட்டிருக்காங்க… மச்சி பெரிய ஆள் ஆகிட்டடா… அவார்ட் எல்லாம் வாங்குற… என்ன மறந்துட மாட்டியே?”

லீயின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே ரவியின் வாய் பதில் சொல்ல, அவனின் கண்கள் லதா எங்கே என்று தேட ஆரமித்தன.

***

எதிரே வந்த ஒரு வெள்ளைக்காரரை முட்டிவிட்டு, சாரி சாரி என்றான் ரவி. இன்னும் அரை மணி நேரத்தில் ஐ.எஸ் மேகஸீனின் பரிசளிப்பு விழா துவங்கி விடும். தன்னால் முடிந்த வேகத்தில் எம்.ஆர்.டி பிளாட்பாரத்தை நோக்கி நடந்தான். கோட்டை கண்டுப்பிடிக்க தாமதம் ஆனதில் நேரத்துக்குப் போய் சேருவோமா என்ற பதற்றம் அவன் மனதில். விழா நடக்கும் இடம் பிஷான். அவன் இருந்த ஸ்டேஷன் போனா விஸ்தா.

“இங்கேர்ந்து சர்கிள் லைன்ல பிஷான் போக 23 நிமிஷம்… அங்கேர்ந்து நடந்து போக 5 நிமிஷம்… அரை மணிக்குள் போய்டலாமுன்னு தான் தோணுது... டாக்ஸி எடுக்கலாம் ஆனா வெளிய டிராபிக் இருக்க…”

திடீரென்று ரவியின் தலைக்குள் ஏதோ அடித்தது. அவனின் நடக்கும் வேகம் குறைந்தது. அவனுக்கு தோன்றிய அந்த பெயரை ஒரு முறை தலைக்குள் சொல்லிப்பார்த்தான். சரியாக இருந்தது. இன்னொரு முறை சொல்லி பார்த்தான். மிகச்சரியாக இருந்தது அந்த பெயர்.

உடனே கைகள் நடுங்க கைபேசியை எடுத்து லதாவிற்கு மணியடித்தான். விறுவிறுவென இங்கும் அங்கும் கடந்து செல்லும் சிலர் அவனை மோதியப்படி சென்றதை அவன் கவனிக்கவில்லை.

“லதா! எங்க இருக்க?”

“இன்னும் 20 நிமிஷத்துல பிஷான் வந்துடறேங்க. உங்களோட கோட் கெடச்சுதா?”

“ம்ம் கோட் இருக்கு. நீ இப்போ எங்க இருக்க?”

“நேஷனல் லைப்ரரிக்கு வந்தேன். இரண்டு புக்கு திருப்பிக்...”

“அங்கேயே இரு. நான் வரேன்.”

அவசர அவசரமாக எம்.ஆர்.டீ ஸ்டேஷனை விட்டு வெளியேறினான் ரவி.

“என்ன ஆச்சுங்க? எதுக்கு இங்க வரீங்க? நாம பிஷான் போகலியா?”

“பிஷான ப்ரீயா விடு. அங்கேயே இரு. வந்து சொல்லுறேன்.” ரோட்டில் வந்த ஒரு டாக்சியைக் கைக்காட்டி நிறுத்தினான்.

“எங்க போணும் சார்?” என்று தமிழில் கேட்டார் டாக்ஸி ஓட்டுனர்.

அவசரமாக கதவை சாத்தியப்படி, “சீக்கிரம் நேஷனல் லைப்ரரிக்கு போப்பா!” என்றான் ரவி.

டாக்ஸி ஓட்டுனர் தலையை சொரியவில்லை. மீட்டருக்கு மேல் காசும் கேட்கவில்லை.

முற்றும்.