September 16, 2013

மொபைல் முனிவர்

எதன் மீது உனக்கு இணைப்பு உள்ளதோ, அதனால் உனக்கு துன்பம் நீளும்ன்னு புத்தர் சொல்லிட்டு போயிட்டாரு. அந்த ஆழமான தத்துவம் என் புத்திக்கு எப்போ எட்டிச்சு? ஸ்லோ மோஷன்ல என் கண்ணு முன்னாடி, அந்த காட்சி நடக்கும் போது தான். ஒரு கையில ஸ்டார்பக்ஸ் காபி, இன்னொரு கையிலஉன்னால் முடியும் - வாழ்கையை சீரமைக்க 7 வழிகள்என்ற புத்தகம். இரண்டு கையும் இப்படி பிஸியா இருக்கும் போது, மூணாவது பொருளை எடுக்கலாமா? இந்த ஞானம் அப்போ மூளைக்கு எட்டல. யாரோ போன் அடிக்கறாங்களே, எடுக்காட்டி தப்பா நினச்சுக்குவாங்களேன்னு, கைபேசியை மேஜைலேர்ந்து எடுத்தேன். என் கை தவற, கூடிலிருந்து விடுப்பட்ட பட்டாம்ப்பூச்சிப்போல கை பேசி எகுற, மெதுவா சுத்தி சுத்தி பூமி மாதாவை அது நெருங்க, வழவழப்பான தரையில லேசான சத்தத்தோட அது முத்தமிட, கைபேசியின் திரையில மரக்கிளைகள்போல பிளவுகள் படர, என் விரல்கள் பரதமாடிய பொத்தான்கள் தெறிக்க... 

என் போன் ஒடஞ்சு போச்சு மச்சின்னு என் நண்பன் அறிவு கிட்ட சொல்லி, சோகத்தை மறக்க சாய் டீ லாட்டேவை ஒரு வாய் குடிச்சேன். அறிவு என்ன மொறச்சு பாத்தான்

டேய் அந்த டப்பா போன் தானே டா! எவ்வளோ வருஷமா அதையே வெச்சு பிளாஸ்திரி போட்டுக்கிட்டு இருந்த. நல்லதா போச்சு... புதுசா ஒன்னு வாங்கித்தொல!”

எனக்கு அதே மாடல் தான்டா வேணும்!”ன்னு மனம் தளராம நான் சொன்னேன். சொல்லிட்டு நான் சீரியசா இருக்கேன்னு காமிக்க, மிச்சம் இருந்த லாட்டேவை மடக்குன்னு ஒரே வாயில குடிச்சு, கம்பீரமா மேஜை மேல கப்பை வெச்சேன். ‘தலைவாபடம் முதல் ஷோவுல எல்லோரும் விசில் அடிச்சிட்டு இருக்கும் போது, பக்கத்துல இருக்கற நண்பனின் தோளை சுரண்டி, “மச்சி! என்ன தான் இருந்தாலும் எம்.ஜீ.ஆர் மாதிரி வருமாடா?” அப்படின்னு சொன்னா என்ன ரியாக்ஷன் வருமோ, அதை துல்லியமா முகத்துல காமிச்சான் அறிவு.

யாரையும் கடுப்பேத்துறது என் நோக்கம் இல்லீங்க. உண்மை இதாங்க. எனக்கு இந்த -போன், புதுசா வர டச்-போன் இதுல எல்லாம் ஈடுபாடு கெடையாது. எனக்கு பிடிச்சது என்னோட நோக்கியா 6188. கையுக்கு அடக்கமா... தூக்கறதுக்கு கனமா இல்லாம... உண்மைய சொல்லனும்னா எனக்கு ஏன் அந்த போன் பிடிச்சிருக்குன்னு சொல்ல தெரியல. உங்க காதலிய இந்த இந்த காரணங்களுக்காக பிடிச்சிருக்குன்னு நீங்க லிஸ்ட் போட முடியுமா? அப்படி போட்டா அது காதலா? சொன்னா நம்ப மாட்டீங்க... நான் முதல் முதல்ல என் போனை பார்த்தது எங்க ஊருல ஒரு புது ஷோரூம்ல. அங்க பல விதமான மொபைல் போன் அடுக்கி வெச்சிருந்தாங்க. அந்த சமயத்துல, என்னை பொருத்தவரைக்கும் ஒரு போன் அப்படின்னா கால் அடிக்க மட்டும்தான். காமிரா, ப்ளூடூத் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் என்னான்னே தெரியாது. சும்மா பொத்தாம்பொதுவா சுத்தி பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஒரு போன் மட்டும் என்னை, “டேய் மகேசு.. மகேசு இங்க பாருடா..” அப்படின்னு கூப்பிடற மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தா அப்படியே மனச கொக்கி போட்டு இழுத்துச்சு. அப்போ செலக்ட் பண்ணதுதாங்க!

அதுக்கப்புறம் அந்த போன் யூஸ் பண்ண பண்ண தான், அது பத்தின பல விஷயங்கள் தெரிய வந்திச்சு. அது ஒரு மாதிரி கிக்காவே இருந்துச்சுன்னு வெச்சுக்கோங்களேன். பெரியோர்களால் நிச்சயிக்க பட்ட திருமணத்துக்கு அப்புறம், வந்த மனைவிய காதலிப்பது போல. ஆனா அப்படி அணு அணுவா நான் காதலிச்ச என் போன், இப்போ என் கண்ணு முன்னாடி சிதறி கிடக்கு. ஏற்கனவே இந்த மாதிரி பல முறை கீழ விழுந்திருக்கு, ஒவ்வொருவாட்டியும் தமிழ் சினிமா கதாநாயகன் மாதிரி அடி தாங்கிடும். ஆனா இப்போ...

சார் கொஞ்சம் வழி விடுங்க...” கையால பல தொப்பைகள தள்ளியப்படி கவுண்ட்டர்ல இருந்த ஆளை நெருங்கினேன். “முஸ்தபால கெடைக்காத போனே இல்ல மச்சிஅப்படின்னு யாரோ சொன்னதா ஞாபகம். அதுனால ஞாயிற்றுகிழமையானாலும் பரவாயில்லைன்னு, அடிச்சு புடிச்சு முஸ்தபால நோக்கியா கைபேசிகள் இருக்கும் கவுண்ட்டருக்கு வந்துட்டேன். ஒவ்வொரு பக்தன் கிட்டயும் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு, அவங்களோட பேரு நக்ஷத்திரத்தை பொறுமையா கேட்டபடி நம்மள காக்க வெக்கும் பூசாரி போல, அந்த கவுண்ட்டர்ல இருந்த ஆளு பொறுமையா என் கிட்ட வந்தாரு. “ஒரு நோக்கியா 6188 போன்...”ன்னு சொல்லி ஒரு சின்ன யோசனைக்கப்புரம், “...இருக்குமா சார்?”ன்னு சேர்த்துக்கிட்டேன்.

உண்மையா சொல்லுறேன், ஒரு அற செகண்ட் என்ன பாத்துட்டு, என் பக்கத்துல நின்னுட்டு இருந்த தொப்பி போட்ட தம்பி பக்கம் திரும்பிட்டார். அந்த தொப்பி போட்ட தம்பி ஏதோ போன் கேக்க, அத எடுக்கறதுல கவுண்ட்டர் ஆளு மும்முரமாகிட்டார்

தொண்டையை சரி செய்தப்படி இன்னும் கொஞ்சம் சத்தமா கேட்டேன், “சார்... நோக்கியா 6188...”

அந்த மாடெல் எல்லாம் இப்போ விக்கறது இல்லீங்க...”

என் முகம் பார்த்து கூட பதில் சொல்லல. வேற ஏதோ போனை டப்பாவுலேர்ந்து எடுத்தப்படி பதில் சொன்னார் அந்த கவுண்ட்டர் ஆளு. அந்த தொப்பி போட்ட தம்பிக்கு பக்கத்துல இருந்த ஜீன்ஸ் பாண்ட்குள்ள கை விட்ட தம்பி, என்ன பார்த்து ஒரு மாதிரி சிரிக்க ஆரமிச்சுட்டாரு.

நான் என்ன தப்பு பண்ணேன் சரண்யா? எனக்கு பிடிச்ச பொருள எப்பவுமே வெச்சுக்கனுமுன்னு நினைக்கறது தப்பா?” லேப்டாப் திரையில் ஸ்கைப் வழியாக என்னோட மனைவி கிட்ட கதறிக்கிட்டிருந்தேன். இரண்டு மாசமா போன் இல்லாத கடுப்பு

.டி.பேரை சுத்தி சுத்தி வந்தேன். பல மால்களுக்குள் நுழைஞ்சு கடை கடையா அலைஞ்சேன். “இந்த போன் லேர்ந்து நீங்க முகப்புத்தகம் கூட யூஸ் பண்ணலாம் சார்”,ன்னு கண்மை அதிகமா போட்ட ஒரு கண்மணி, அவங்க கடைய நான் தாண்டிபோறப்போ சொன்னாங்க. என் காதுல அது விழுந்தப்போ, பளிச்சுன்னு ஒரு ஐடியா வந்திச்சு. உடனே வீட்டுக்கு போய் முகப்புத்தகத்தை திறந்தேன். பிரெண்ட் லிஸ்ட்ல இருக்கற ஒவ்வொரு நல்ல நண்பருக்கும் மெசேஜ் அனுப்பிச்சேன். (அதவாது நான் போடும் ஸ்டேடஸ லைக் செய்யும் நண்பர்) ச்சே! முகப்புத்தகதுல ஒவ்வொருத்தர் ப்ரொபைல்லயும் அவங்க என்ன மாடல் போன் வெச்சிருக்காங்கன்னு போட்டிருந்தா, எவ்வளோ வசதியா இருந்திருக்கும். இப்போ ஒவ்வொருத்தருக்கும் மெசேஜ் அனுப்பனுமே... பேசாம காபி பேஸ்ட் பண்ணி, பெயரை மட்டும் மாத்திடலாமா?

ஹல்லோ <நண்பரின் பெயர்>, எப்படி இருக்கீங்க? நம்ம பேசியே எவ்வளோ நாட்கள் ஆச்சுல! எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா? வாய்ப்பு ரொம்ப கம்மி தான், ஆனா உங்க கிட்ட ஒரு நோக்கியா 6188 போன் இருக்குமா? இல்லாட்டி உங்களுக்கு தெரிஞ்சவங்க யார் கிட்டயாவது? நான் பண்ணுற ஒரு ரிசர்ச்சுக்கு அந்த போன் தேவைப்படுது. அப்படி உங்களால வாங்கி கொடுக்க முடிஞ்சுதுனா, நீங்க கேக்குற கமிஷன் கொடுக்க நான் ரெடி! கண்டிப்பா சொல்லுங்க. நன்றி, மகேசு

சில பேர் பாத்துட்டு, “கண்டிப்பா மகேசு! நான் சொல்லுறேன்அப்படின்னு பதில் சொன்னாங்க. சில பேர், மெசேஜ் பார்த்ததுக்கு டிக் அறிகுறி வந்திச்சு, ஆனா பதில் தான் வரல. இரண்டு வாரம் வெயிட் பண்ணேன். அதுக்கப்புறம், “போங்க டா டேய்! உங்க யாரோட உதவியும் வேண்டாம்! இந்த கலி யுகத்துல மனுஷங்கள நம்பி பிரயோஜனமே இல்ல...”ன்னு நினைச்சுக்கிட்டே, லேப்டாப்ல கூகிளை திறந்தேன். இரண்டு மணி நேரம் கழிச்சு, லேப்டாப்பை கடுப்புல மூடினேன். பக்கத்துல ஒரு கிளாஸ் கிண்ணத்துல இருந்த என் பழைய போனோட உடைஞ்ச பாகங்கள பார்த்தேன். தாங்க முடியாம அழுக வந்திச்சு. மேஜை மேல தலைய சாச்சேன்.

என் அன்புக்குரிய மகேசு, என்ன வரம் வேண்டும் உனக்கு?”

நிமிர்ந்து பார்த்தா, கடவுள் எனக்கு முன்னாடி பிரசன்னமாகியிருந்தார். எனக்கு ஒண்ணுமே புரியல. உடனே கன்னத்துல போட்டுக்கிட்டேன். அப்போதான் என் கன்னத்துலேர்ந்து பெரிய தாடி வளர்ந்திருக்குன்னு தெரிஞ்சுது. இடுப்பு வரைக்கும் எறும்புகள் மலை கட்டிருந்துச்சு. கடவுளை பார்த்து வணக்கம் சொன்னேன்.

பல வருடம் பலத்த தவம் செய்துள்ளாய்... என்ன வேண்டுமோ கூச்ச படாமல் கேள் குழந்தாய்!”

உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல சாமி... எனக்கு வேண்டியது எல்லாம் ஒரு நோக்கியா 6188 தான்...”

கடவுள் தலையை சாய்த்து சற்று யோசித்தார். பிறகு நிமிர்ந்து என்னை பார்த்து, “இதற்கு நீ ஏன் எட்டு ஆண்டுகள் கடும் தவம் செய்தாய்? நோக்கியா கால் சென்ட்டருக்கு ஒரு கால் அடித்திருக்கலாமே...”

ஞானபண்டிதா! என் அறிவு கண்ணை திறந்து விட்டாய்!” அப்படின்னு நான் சொல்லி முடிக்கறதும், கடவுள் மறையுரதும், நான் தூக்கத்துலேர்ந்து எழுந்திரிக்கறதும் சரியா இருந்துச்சு. உடனே வெளிய ஓடிபோய், நோக்கியா கால் சென்டருக்கே கால் அடிச்சேன். ம்-ஹூம்! “உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு பீஸ் தயாரிச்சா தான் உண்டு சார்!” அப்படின்னு சொல்லிட்டான். தலைய பிச்சுக்கலாம் போல இருந்துச்சு. அப்போ ஒரு யோசனை...

சினிமா நடிகர்களுக்கு டோப்பா, துணிகள், பொருட்கள் வாடகைக்கு தருகிற கடைங்களுக்கு போனேன். அங்கயும் இல்லைன்னு தலை ஆட்டினாங்க. கடுப்புல கேட்டேன், “ஹீரோ ஹீரோயின் கிட்ட காதல சொல்ல, ஒரு நோக்கியா 6188 போன் எனக்கு நாளைக்கே வேணும்னு, யாராச்சும் பெரிய டைரக்டர் கேட்டா என்ன சார் பண்ணுவீங்க?”. கடைக்காரன் என்னை பாத்துட்டு, “அந்த மாதிரி ஸ்கிரிப்ட் இன்னும் யாரும் எழுதலீங்க...”ன்னு மரியாதையோட பதில் சொன்னான்.

சுத்த வேஸ்ட்டுடா நீங்கெல்லாம்!”ன்னு கத்திக்கிட்டே, சிம் லிம் ஸ்க்வயருக்கு ஓடினேன். அந்த கட்டிடத்துக்குள்ள நுழையும்போது, என்னான்னு தெரியல, மனசுல கண்டிப்பா போன் இங்க கிடச்சிடுமுன்னு ஒரு நம்பிக்கை மணி அடிச்சுது.

பல கடைகளுளநோ சார்!”, “சாரி!” ன்னு பதில் வந்தப்புறம், இடுக்குல இருக்கற ஒரு கடை கண்ணுல பட்டிச்சு. அங்க மூக்கோட நுனியில கண்ணாடிய மாட்டிக்கிட்டு, அது வழியா பாக்காம, தலைய முன்பக்கமா சாச்சப்படி என்ன பாத்தாரு, ஒரு தாத்தா.

அங்கில்... யூ காட் தி நோக்கியா 6188 போன்?”

போன் பேரு கேட்ட உடனே, உதட கடிச்சு யோசிச்சாரு. அவர் பின்னாடி இருந்த பல மோடைகளில் அடுக்கியிருந்த டப்பாக்கள உத்து பாத்தாரு

ஒன் மினிட் ஆன்...”ன்னு சொல்லிட்டு ஒரு கதவு வழியா ஸ்டோர் ரூம் மாதிரி இருந்த ஒரு அறைக்குள்ள போனாரு. என்னோட நெஞ்சு ஆவலா அடிக்க ஆரமிச்சுது. ஸ்டோர் ரூம்லேர்ந்து கையில ஒரு டப்பாவோட திரும்பி வந்தாரு. அந்த டப்பா மேல இருந்த தூசிய ஊதியப்படி, அத கவுண்ட்டர் மேல வெச்சு, பிரிக்க ஆரமிச்சாரு. டப்பா வெறும் அட்டைபெட்டி டப்பாவா இருந்ததுனால, உள்ள என்ன இருக்குமுன்னு தெரியல. பிரிச்சா, பல விதமான பழைய கைபேசிகள் அதுக்குள்ள குவிச்சு கிடந்துச்சு.. 

ஸீ இப் யூ காட் ஹியர்... அங்கிள் ஐஸ் நாட் வெரி குட் ஆன்...”ன்னு சொல்லி அந்த அட்டைபெட்டி டப்பாவ என் கிட்ட கொடுத்தப்படி லேசா சிரிச்சார். நானும் அவர் கிட்டேர்ந்து அந்த டப்பாவை வாங்கி, அருசியில கல்லு தேடுற மாதிரி போன் தேட ஆரமிச்சேன். இவ்வளோ வித விதமா போன் இருந்திருக்கான்னு ஆச்சரியமா இருந்துச்சு. ஒவ்வொரு போன் எடுக்கும் போதும், இது எனக்கு வேண்டிய போன் இல்ல, ஆனா இதையும் தேடி ஒரு நாள் ஒரு மகேசு வருவான்ல... அப்படின்னு தோணிச்சு. அப்போ தான், அத பார்த்தேன். பிங்க் கலர் போன் ஒன்னுக்கு பின்னாடி... பாதி ஒலிஞ்சுக்கிட்டு, திருட்டுத்தனமா என்னை எட்டி பாக்குற மாதிரி பாத்துச்சு... கை ஒதர ஆரமிச்சது எனக்கு... மெதுவா அதை தொட்டு எடுத்தேன்... 6188... என்னோட செல்லம்... இது தான் எழுத பட்ட விதின்னு சொல்லுவாங்களோ... நான் மட்டும் இந்த இடுக்குல இருக்கற கடைய பாக்காம போயிருந்தா

ஒரு நிமிஷம் இரு... இந்த போன் இன்னும் கொஞ்சம் கனமா இருக்கணுமே... இவ்வளோ லைட்டாவா இருக்கும் 6188? போனை திருப்பி பாத்தப்போதான், அதுக்கு பின்னாடி ஒரு டாலர் அளவுக்கு ஓட்டை இருந்தது தெரிஞ்சுது. ஓட்டை வழியா பாத்தா போன்குள்ள ஒண்ணுமே இல்ல

அங்கிள் திஸ் போன் எம்ப்டி வாட்?!”

எம்ப்டி ?”

கண்ணாடிய மூக்கு நுனிலேர்ந்து கண்ணு கிட்ட கொண்டு வந்து, என் கையிலேர்ந்து அந்த டப்பா போனை வாங்கினாரு தாத்தா. கடுப்பு தலைக்கு ஏறிச்சு எனக்கு. சர்ருன்னு வெளிய வந்தேன். எம்.ஆர்.டிகுள்ள நுழைஞ்சு, ஒரு சீட்டுல உக்காந்துக்கிட்டு, -போட் வெளிய எடுத்து, ‘விடுகதையா இந்த வாழ்க்கைங்கற பாட்டை கேக்க ஆரம்பிச்சேன்

என் முன்னாடி இருந்த வரிசைல காபி கலர்ல முடி வெச்சிருந்த ஒரு தம்பி, கண்ண மூடி பாட்டு கேட்டுக்கிட்டு இருந்தாரு. அவர் முகத்துல ஒரு அமைதி. இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தா என்ன... வராட்டி என்ன... எனக்கு என்னோட இசையும் தூக்கமும் போதும், அப்படின்னு அவர் சொல்லுற மாதிரி எனக்கு தோணிச்சு. நானும் இனிமே இந்த காபி முடி தம்பி போல தான் இருக்கணும். இனிமே அந்த போன் கெடச்சா என்ன... கெடைக்காட்டி என்ன... நாசமாப்போகட்டும்! அப்படின்னு முடிவு பண்ணேன்.

அந்த தம்பிக்கு பக்கத்துல ஒரு ஆண்ட்டி. அவங்களும் காதுல இயர்போன்ஸ் மாட்டிக்கிட்டு, டச்-போன்ல ஏதோ வீடியோ பாத்துக்கிட்டு இருந்தாங்க. ச்ச... என்ன ஒரு நிம்மதியான பொழப்பு. பேசாம இந்த டச்-போனே வாங்கிடலாமா? அந்த எண்ணம் என் மனசுல வந்தப்போதான் கவனிச்சேன், என் முன்னாடி ஒரு பாட்டி நின்னுக்கிட்டு என்னையே முறைச்சு பாத்துக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நாள் முன்னாடி பேய் படம் பாத்திருந்ததுனால, எனக்கு லேசா தூக்கி வாரி போட்டிச்சு. அவங்க நம்மள தான் பாக்குறாங்களா, இல்ல வேற ஏதோ யோசனைல இருக்காங்களா?

டோர்ஸ் ஆர் க்ளோசிங்ன்னு சொல்லிச்சு அந்த இனிமையான பெண் குரல். எந்த ஸ்டேஷன்ல இருக்கோமுன்னு நிமிர்ந்து பார்த்தேன். சிகப்பு விளக்கு டோவர்லேர்ந்து கிளிமெண்டிக்கு மாறிச்சு

டேய்! மூணு ஸ்டாப் தள்ளி வந்துட்டடா!” மனசுக்குள்ளயே கேவலமா என்னை திட்டிக்கிட்டேன். அடுத்த ஸ்டாப்ல இறங்கி திரும்ப போகணும்... போன் இன்னும் கெடைச்ச பாடில்ல... அந்த பாட்டி வேற என்னையே முறைச்சு பாத்துக்கிட்டு இருக்கு... என்ன வேணும் அதுக்கு? அப்போ தான் எனக்கு மண்டைல உரைச்சுது, நான் ரிசர்வெட் சீட்டுல உக்காந்துக்கிட்டு இருக்கேன்னு. டக்குனு எந்திருச்சு அவங்களுக்கு சீட் கொடுத்தேன். அவங்களும் சிரிச்சுக்கிட்டே நன்றி சொல்லிட்டு உக்காந்தாங்க

திடீருன்னு யாரோ என்ன கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தேன். நான் ரிசர்வெட் சீட்டை கொடுத்த அந்த பாட்டி, பைக்குல்லேர்ந்து போன் எடுத்து, யார் கூடையோ பேச ஆரமிச்சுட்டாங்க. அவங்க காது கிட்ட இருந்த முடியும், அவங்க கையும், கையில போட்டிருந்த பெரிய மோதிரமும், அந்த போனை கொஞ்சம் மறைச்சிட்டு இருந்துச்சு. ஆனா எவ்வளோ மேகங்கள் சூழ்தாலும், பிச்சுக்கிட்டு ஒளி அடிக்கிற சூரியன் மாதிரி மின்னிச்சு அந்த போன்... ஒரு கொக்கி என் மனசோட கதவ இரண்டாவது வாட்டி தட்டிச்சு...


May 30, 2013

ஒரு ஜோசியனின் கனவுகள்

(I wrote this short story for the topic "Kanavugal" Thangameen Short Story Contest in Nov 2012. It's a translated version of my earlier story 'The Astrologer's Fate', with minor modifications to make it set in Singapore.)

அவனுக்கு அஞ்சு வயசு ஆகும்போது ஒரே ஒரு சின்ன பொய் சொன்னதுக்காக அவனை அம்மா திட்டினாள். "பொய் சொல்லுற வாய்க்கு போஜனம் கிடைக்காதுடா பாவி!", என்றாள், புருவங்களை இறுக்கியபடி. அவன் அம்மாவின் இவ்வார்த்தைகள் அவனுக்கு நிறைய நாட்கள் தூக்கம் வராமல் செய்தது. ஆனால் அவன் வளர்ந்து ஒரு ஜோசியக்காரன் ஆன பின்பு தான் அவனுக்கு அவன் அம்மா சொன்னது எவ்வளவு தப்பென்று புரிந்தது.


சிறு வயதிலேயே பள்ளியில் கதை கட்டுவதில் அவன் கில்லாடி. ஒரு முறை கணக்கு கிளாசுக்கு வராததற்கு, வாத்தியாரிடம்  அவன் சொன்ன கதையின் கருவை வைத்து, அவனின் நண்பன் ஒரு மேடை நாடகமே எழுதிவிட்டான் என்றால் பாத்துக்கோங்க!


"உனக்கு கணக்கு தான் வரல. கதை சுத்துற திறமைய வெச்சு ஏதாச்சும் பண்ணு!" என்று அவனுக்கு தட்டி கொடுத்தார் கணக்கு வாத்தியார். கணக்கு வாத்தியார் அன்று சொன்னதைத்தான், பல வருடங்களுக்கு பிறகு சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் உள்ள ஹோட்டல் பார்க் ராயல் உள்ளே உட்கார்ந்துகொண்டு செய்தான் அவன். அவனது கடையின் பெயர் "எதிர் நோக்கியா". அவனது வேலை ஒரு சின்ன கூண்டில் இருக்கும் கிளியை வைத்துக்கொண்டு, அந்த 5-ஸ்டார் ஹோட்டலுக்கு தங்க வரும் விருந்தாளிகளின் கவனத்தை ஈர்ப்பது தான். அவனை போன்ற இருவது வயது இளைஞனுக்கு அது குஷியான வேலை.


"இந்த கிளி பேரு லக்ஷ்மி சார், காசு குடுக்கற தெய்வத்தோட பேரு. இந்த கிளி கணிச்சு சொன்னா சத்தியமா நடக்கும் சார்! ஜப்பான்ல பூகம்பம் வரும்னு கூட என் லக்ஷ்மி முன்னாடியே சொன்னா சார்... யாருமே சீரியசா எடுத்துக்கல. நீங்க வந்து பாருங்க சார். லக்ஷ்மி எடுக்கற சீட்டவெச்சு உங்க வாழ்க்கைல என்ன நடக்கும்னு புட்டு புட்டு வெப்பேன்!"


இதே விஷயத்தை அந்த ஹோட்டலுக்கு வருபவர்களிடம் பல பல மொழிகளில் கூறுவான். சற்று அருகில் நீங்கள் சென்றவுடன், உங்கள் காதருகே வந்து, "இந்த கிளியோட தாத்தா சிங்கபூர் மலேசியா கிட்டேயிருந்து பிரியும் தேதியை லீ குவான் யூவிற்கு முன்க்கூட்டியே சொன்னது தெரியுமா?", என்பான். அவன் சொன்னதை நம்பினார்களோ இல்லையோ, ஹோட்டல் விருந்தாளிகள் அவன் கிளியை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். "அவன் சொல்வதை அப்படியே செய்கிறதே!" என்ற வியப்பு அனைவருக்கும்.


இளம் தம்பதிகள்தான் அந்த ஜோசியக்காரனின் முதல் குறி. புதிதாக கல்யாணம் செய்த மனைவி கேட்பதை கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு கணவன் கையில் சிக்கினால், காசை கறக்காமல் ஓய்ந்தது இல்லை அந்த ஜோசியக்காரன். அதுவும் ஒரு இளம் பெண்ணை மிக எளிதாக வார்த்தைகளால் கவரக்கூடிய பேச்சுதிறமையும் அவனிடம் இருந்தது. அவன் எப்பொழுதுமே எதிர்காலத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும், நல்ல செய்தி வரும் என்று தான் ஜோசியம் கூறுவான். "உங்களுக்கு கண்டம்!", "ஆபத்து வர போகுது!" என்றெல்லாம் சொல்லி தனது வாடிக்கையாளர்களை கஷ்டபடுத்த விரும்பாத ஒரு ஜோசியக்காரன் அவன். இதனால் ஹோட்டல் விருந்தாளிகள் அவன் கடைக்கு வந்து கிளி ஜோசியம் பார்த்தால், அவனுடனும்  அவன் கிளியுடனும் போட்டோ எடுத்துக்கொள்ளாமல் திரும்பயதில்லை.


இறுதியில், ஜோசியக்காரனுக்கோ அவனது சன்மானம் கிட்டிவிடும், ஹோட்டல் நிர்வாகிகளுக்கோ "எதிர் நோக்கியா" கடையால் மாத வாடகை வந்துவிடும், விருந்தாளிகளுக்கோ கிளியுடன் ஒரு ஜாலியான அனுபவம் கிடைத்துவிடும், அந்த கிளியிற்க்கோ பாதாம் பிஸ்தா சாப்பிட கிட்டிவிடும். மொத்தத்தில் எல்லோருக்கும் திருப்தி.


இவ்வாறு அந்த ஜோசியக்காரனின் வாழ்கை சக்கரம் மெதுவாய் சுழன்றது. இதை பார்த்து கொண்டிருந்த சக்திவாய்ந்த நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களுக்கு இது சற்றும் பிடிக்கவில்லை. மக்களின் ஒரே மாதிரியான தினவாழ்க்கை கிரகங்களுக்கு அலுப்பாக இருந்தது. உலகத்தில் நிறைய மக்கள் தினமும் அதே வேலையை செய்து செய்து, கிரகங்களை கொட்டாவி விட வைத்தனர். கொஞ்சம் சுவாரஸ்யத்தை உண்டாக்க என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க, கிரகங்கள் எல்லாம் ஓர் இரவு ஒன்று கூடினர். அந்த கூட்டத்தில், சிறிய நட்சத்திரம் ஒன்று பளிச்சிடும் ஐடியா சொன்னது. அந்த ஐடியாவை கேட்ட உடனே, மற்ற நட்சத்திரங்களும் கிரகங்களும் புன்னகையால் மின்னின.


அடுத்த நாள் பூமியில், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.


ஹோட்டல் பார்க் ராயல் இழுத்து மூடப்பட்டது. ஜோசியக்காரன் லக்ஷ்மியை விற்க வேண்டிய சூழ்நிலை ஆனது. செல்வம் தரும் அந்த குட்டி தேவியை விற்றதில் வந்த காசு, ரோட்டோரமாக ஒரு சின்ன கடை போட்டு பூத கண்ணாடி வாங்குவதற்கு சரியாய் இருந்தது. ஜோசியக்காரன் இப்பொழுது ரேகை படிக்கும் தொழிலில் இறங்கிவிட்டான்.


ரேகைகள் பார்க்க அவனுக்கு நிறைய கைகள் கிடைத்தன. அந்த கைகள் எல்லாம் சில நாட்கள் முன்னர் பெரிய பெரிய கம்பெனிகளில் நோட்டுகளை என்னிக்கொண்டு கணினி பலகைகளை தட்டிக்கொண்டு இருந்தன. ஆனால் இப்பொழுது அந்த கைகளுக்கு என்னவோ தட்டவோ ஏதும் இல்லை. திண்டாட்டம் தான். இந்த சூழ்நிலையில் "எல்லாம் நல்லதா நடக்கும்" என்று சொல்வது ஜோசியக்காரனுக்கு கொஞ்சம் கஷ்டமானது.


வேலையில்லா மக்கள் மனதுகளில் கோபம் பொங்குவதை அவன் கவனித்தான். சோர்வு மனப்பான்மை கூடிக்கொண்டிருந்தது. இதனால் எதிர்காலத்தை பற்றி அவன் கணித்து சொல்வதை சிறிது கவனமாய் சொல்ல கட்டாயம் உண்டானது. சொல்ல வரும் விஷயத்தில் ஒரு சிறு பிழை செய்தால் கூட, மக்கள் கோபத்தில் அவன் கடையையே அடித்து நோரிக்கிவிட கூடும், என்று உணர்ந்தான்.


ஞானி என்ற பெயரில் இருந்த ஒரு பிரபலமான ஜோசியக்காரருக்கு நடந்த கதையை அவன் கேள்வி பட்டிருந்தான். ஒன்பதாம் கிரகமான ப்ளுட்டோவை கிரகமே அல்ல என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் கூறியதால்தான், கிரகங்களுக்கு கோபம் வந்து பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது என்று சொன்னார் ஞானி. இதை கேட்ட சில பேர் சிரித்து விட்டு மறந்தனர், ஆனால் சில பேர் ஞானியை அடித்து அவரை மருத்துவமனைக்கு பார்சல் செய்து அனுப்பிவிட்டனர். இதை கேட்டப்பின் தான் சொல்லும் வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்தான் நமது ஜோசியக்காரன்.


வானில் இருக்கும் நட்சதிரங்களுக்கோ இப்பொழுது குஷியாகி விட்டது. முதலில் ஐடியா கொடுத்த சிறிய நட்சத்திரம் உலகத்தில் இன்னும் சில கலகங்கள் உண்டாக்க ஐடியா கொடுத்து கொண்டே இருந்தது. ஜோசியக்காரன் வாழ்க்கையிலும் ஒரு கலகம் வேண்டாமோ?


அப்பொழுதுதான் ஜோசியக்காரன் அவளை முதலில் பார்த்தான். அந்த நாளை ஜோசியக்காரனால் மறக்கவே முடியாது - அவன் அவள் கையை பிடித்து ரேகை பார்த்த அந்த நாள், அவள் கண்களில் மின்னும் ஒளியை கண்ட அந்த நாள். அப்பொழுதே முடிவு செய்தான். "இவதான் என் மனைவி!"


நட்சத்திரங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, சாமர்த்தியமாக காய்களை நகர்த்தினான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். சில நாட்களிலேயே அவர்கள் ஒன்றாக பார்க்கில் உட்கார்ந்தபடி, தங்கள் எதிர்கால கனவுகளை நான்கு கண்களால் பார்த்து ரசித்தனர்.  


"கிராமத்துல குயுலுங்க கூவுற எடத்துல ஒரு வீடு. இந்த எச்.டீ.பீ வத்திபொட்டி சைஸ்ல இல்லாம, நல்லா பெருசா! அப்பப்ப வந்து நலம் விசாரிச்சிட்டு பக்கோடா தின்ன மாமா-மாமிகள் இல்லை. அமைதியான சந்தோஷமான வாழ்க்கை", என்று கனவு கண்டான் ஜோசியக்காரன்.


அந்த அழகிய கனவை கலைக்கும்படி, சிவந்த கண்களுடன் அவர்கள் முன்னே வந்து நின்றான் அந்த காதலியின் அண்ணன்.


"நாங்க உயிருக்கு உயிரா காதலிக்கறோம். நீங்க ஒத்துக்கலனாலும் ஓடி போய் கல்யாணம் செஞ்சுக்குவோம்!" என்று தமிழ் சினிமா பார்த்த மயக்கத்தில் சொன்னான் ஜோசியக்காரன்.


பெண்ணின் அண்ணன் கராத்தே கற்றவன் போலும். பார்க்கில் கொஞ்சம் 'டிஷூம் டிஷூம்' நடந்த பிறகு, காதலியோ வீட்டின் ஒரு பூட்டப்பட்ட அறையில் ஓரமாக அழுதாள். நமது ஜோசியக்காரனோ அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் விழுந்தான்.


"வாப்பா! நீ என்ன சொன்ன?" என்று கேட்டார் பக்கத்து படுக்கையில் முகத்தில் கட்டுகளுடன் இருந்த ஞானி. (ப்ளுட்டோவை பற்றி பேசி அடிவாங்கினாரே அந்த ஞானி...)


பதிலிக்கு நமது ஜோசியக்காரன் முனங்கினான். அவனால் தன் முதுகை மெத்தைமீது சாய்க்க முடியவில்லை.


"நன்றிகெட்ட உலகம் இது நண்பா!" என்றார் ஞானி, "பிறர் செவி விரும்புவதை சொன்னால் தருவார் நேசம்... தன் மனம் விரும்புவதை சொன்னால் செய்வார் நாசம்!"


நமது ஜோசியக்காரன் அழ துவங்கினான். ஞானி கட்டிலிலிருந்து தன் தலையை தூக்கி ஜோசியக்காரனை பார்த்தார்.


"என்னப்பா? கவிதை நல்லா இல்லியா என்ன?"


"என் மனசு பூரா அந்த பொண்ணு தான் சார்", ஜோசியக்காரன் முனுமுனுத்தான், "என்ன பன்னுறதுன்னே தெரியல..."


"கவலை வேண்டாம் நண்பா! யாம் இருக்க பயமேன்? நான் ஒரு ஜோசியக்காரன்!" திரு ஞானி அவர்கள் இதை அறிவித்தப்படி தனது படுக்கையிலிருந்து எழுந்து கைகளை விரித்து சொன்னார், "நான் சொன்னால் நடக்கும்!"


அந்த வழியாக சென்ற ஒரு மலாய் நர்ஸ், ஞானியை மீண்டும் படுக்கையில் தள்ளினாள். படுக்கையில் விழுந்தபடி ஞானி நமது ஜோசியக்காரனின் காதுகளுக்கு அருகில் சென்று, "நட்சத்திரங்களை ஏமாத்தனும். அவ்வளவு தான்!" இவ்வாறு சொல்லிவிட்டு தனுக்குத்தானே சிரித்து கொண்டார்.


"நானும் ஒரு ஜோசியக்காரன் தான்!" என்று பதில் அளித்தான் நமது ஜோசியக்காரன்.


"அதுனால?"


"அதுனால உன்னோட எல்லா விதமான வித்தைகளும் எனக்கு அத்துபடி. என்ன பேசாம அழவிடு போரும்!"


"ஒரு கடையில் கவரிங் நகை வித்தா, தங்கமே இல்லைன்னு அர்த்தமா என்ன?" ஞானி புன்னகையுடன் கேட்டார்.


"சரி. நான் போலிஜோசியர்னு ஒத்துக்கறேன். ஆனா நெஜமாவே ஒரு மனுஷனோட எதிர்காலம் அவன் கையில் எழுதிருக்கா?", என்று சந்தேகத்துடன் கேட்டான் நமது ஜோசியக்காரன், "கிரகங்கள் நகர்வதால் நம் வாழ்க்கை பாதிக்குமா?"


ஞானியின் புன்னகை நீடித்தது. "நான் முன்பு சொன்னவாறு, நட்சத்திரங்களை ஏமாத்தனும். அவ்வளவு தான்!"


நமது ஜோசியக்காரர் ஞானியின் கண்களை உற்று பார்த்தார். சில வினாடிகளுக்குப்பின், "ஞானி அவர்களே! சொல்லுங்க... என் காதலிகூட ஒன்னு சேர நான் என்ன செய்யணும்?"


ஞானியின் முகத்தில் இருந்த ஒரு தேஜஸ் நமது ஜோசியருக்கு அவர் மீது நம்பிக்கை கொண்டு வந்தது. ஞானி சொன்னப்படி செய்தார். அவர் சொல்லும் பரிஹாரங்களில் நிறைய காசு செலவழித்தப்பின்தான் ஞானி ஏமாற்ற நினைப்பது நட்சத்திரங்களை அல்ல என்று ஜோசியக்காரனுக்கு விளங்கியது.


கிரகங்கள் மீண்டும் தங்களின் சேட்டையை அருமையாக நடத்திவிட்டனர் - இந்த முறை ஞானி மூலமாக. நமது ஜோசியக்காரன் கோபத்தில் கொப்பளித்தான். தனது வீட்டு பாத்ரூமிலிருந்து ஒரு இரும்பு பைப்பை உடைத்து  எடுத்தான்.


கையில் பைப்புடன் ஞானியின் வீட்டு கதவை தட்டினான். ஞானி கதவை திறந்து சிரித்தார். டமால்! டிஷூம்!


அடுத்து தனது காதலியின் அண்ணன் வீட்டு கதவை தட்டினான். காதலின் வில்லன் கதவை திறந்து நக்கலாக சிரித்தார். டமால்! டிஷூம்!


அடுத்து வேறொரு கதவை தட்டினான். அவன் காதலி தயக்கத்துடன் கதவை திறந்தாள். அவள் கழுத்தில் தாலி கயிர் தொங்கிக்கொண்டிருந்தது. அவள் பின்னிலிருந்து பயத்துடன் ஒரு ஆள் எட்டி பார்த்தான்.


டமால்! வெடித்தது ஜோசியக்காரனின் இதயம்.


"என்ன மன்னிச்சிடுங்க... வீட்டுல வர்ப்புருத்தினாங்க... எனக்கு வேற வழி தெரியல..." என்றெல்லாம் அழுதுக்கொண்டே கூறினால் காதலி.


ஆனால், ஜோசியக்காரனுக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவனது கனவு இல்லம் வெடித்து சிதறும் சத்தம் தான் அவன் காதுகளில் ஒலித்தது. குயில்கள் கூவுவதை நிறுத்தி விட்டன. சிதறி கிடந்த கற்பனை வீட்டின் கற்களின் மீது ஒன்றும் புரியாமல் நின்றிருந்தான். அப்பொழுதுதான் அவனுக்கு அந்த சத்தம் கேட்டது - ஒரு மெல்லிய சிரிப்பொலி.


"கேட்டுச்சா உனக்கு?" என்று காதலியை கேட்டான். அவள் ஒன்றும் புரியாமல் முழித்தாள்.


அவள் நடிக்கிறாள் என்று தனக்கே சொல்லிக்கொண்டான் ஜோசியக்காரன். மெல்லிய சிரிப்பொலி பொறுமையாக பெருகி ராட்சஸ அலறல் போல் ஒலித்தது. மேலே இருக்கும் வானத்தை பார்த்தான். நட்சத்திரங்கள் அனைத்தும் அவனது நிலையை பார்த்து வாய் விட்டு சிரித்து கொண்டிருந்தன.

"நீங்க நாசமா போக!" என்று வானை பார்த்து சபித்தான்.

February 6, 2013

தேசியக் கொடியும் சில பெருமூச்சுகளும்

(I wrote this short story for the topic "Paalangal" for the Thangameen Short Story Contest in Feb 2013.)

"வானமோ நீலம், நீ தான் என் பாலம்...", என்று கண்ணாடி முன்னே சொல்லிப்பார்த்தான் சிவா. முகபாவனைகள் எதிர்ப்பார்த்த வண்ணம் வெளிவராததால், இரண்டு முறை திரும்ப சொல்லிப்பார்த்தான். இது தேறாதென்று வெறுப்புடன் கையில் இருந்த சீப்பை வீசி எறிந்தான். அந்த சீப்பு பறந்துபோய் ஒரு காகித தேசியக்கொடி மீது விழுந்தது. அந்த இந்திய காகிதக்கொடி சிவாவின் நிலையை பார்த்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டது. இறைவனின் படைப்பில் ஒவ்வொரு அணுவிற்கும் ஒரு நோக்கம் உண்டு, என்று பக்கத்து வீட்டு தாத்தா அவ்வப்போது சொல்லுவார். அது போல, கற்பகாம்பாள் ப்ரெஸ்ஸில் அச்சடிக்கப்பட்ட அந்த கொடியின் நோக்கம், சிவாவை காதல் எனும் கடலில் விழவைப்பது. அந்த நோக்கத்தை நிறைவேற்றிய திருப்தியுடன் அந்த கொடி அமைதியாக முக்தியை நோக்கி காத்திருந்தது.

இரண்டு மாதங்கள் முன்புவரை யாரேனும் சிவாவின் நெற்றியில் விபூதியையோ குங்குமத்தையோ பார்த்தால், உடனே ரமணனுக்கு மணியடித்து, "சார், இன்னிக்கி கண்டிப்பா மழை வந்திடும்!" என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அக்மார்க் நாத்திகன். (அவன் ஏன் நாத்திகனானான் என்பதற்கு வேறு தனி கதை உள்ளது.) ஒரு நாள் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு குதித்தெழுந்தான். தாப்பாளை திரந்துப்பார்தால், ஒரு அழகிய இளம்பெண். வேறு எங்கோ செல்ல நினைக்கும் கண்களை கட்டுப்படுத்தி, "எஸ்?" என்றான்.
"ஹாய்! நான் ஷ்ரீ ஷ்ரீ ரவிசங்கர் ஆஷ்ரமத்திலிருந்து வருகிறேன். அண்ணா ஹஜாரேவின் போராட்டத்திற்காக இளைஞர்கள் நாங்கள் நிதி திரட்டுகிறோம். உங்களுக்கு தோன்றுகிற பங்களிப்பு தாருங்கள்", என்றபடி ஒரு டப்பியை நீட்டினாள்.

"அண்ணாவாவது போராட்டமாவது... நீங்க எதுக்காக என்ன கேட்டாலும் நான் தருகிறேன்!" என்று மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டு, சட்டை பைக்குள் கையை விட்டு, இருக்கும் நோட்டுகளை பார்க்காமல் வெளியே எடுத்தான். அந்த பொண்ணும் நோட்டுகளை வாங்கிக்கொண்டு, ஒரு தேசியக்கொடியை சிவாவின் சட்டையில் நெஞ்சருகே குத்தினாள்.

அடுத்த நாள் ஷ்ரீ ஷ்ரீ ரவிசங்கர் ஆஷ்ரமத்தில் நம்ம நாத்திகன் கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தான். மூச்சை இழுத்து இழுத்து விடும் இடைவெளிகளில், ஒற்றை கண்ணை திறந்து அவளை தேடினான். இவ்வாறு இரு மாதங்களாக அவளை நினைத்து நினைத்து பெருமூச்சும் சிறுமூச்சும் விட்டப்படியாக இருந்தவன், இப்போது காதலை அவளிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் கண்ணாடி முன்னால் நின்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். கடைசியில் கவிதை எல்லாம் தேவை இல்லை, இப்போதெல்லாம் பெண்களுக்கு சின்சியரா பேசினாத்தான் பிடிக்குது என்று தியாகு சொன்ன அட்வைஸ்ப்படி நடக்க முடிவு செய்தான்.

அன்று ஆஷ்ரமத்தில் ஏதோ சொற்பொழிவு போலும். சில வீ.ஐ.பீகள் கூட வந்திருந்தன. மேடையில் ரவிசங்கர் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். ஆனால் சிவா பார்த்துக்கொண்டு இருந்ததோ ரவிசங்கரின் வலதுபுறத்தில் நின்றிருந்த அவனது அழகியைத்தான். மேடையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக பேசினார்கள். ஏதோ பெரிய பிரச்சனை நாட்டில் நடக்குது என்று அவர்கள் கத்திய குரலை வைத்து யூகித்தான் சிவா. என்ன பிரச்சனை இருந்தால் என்ன? பேச்சுவார்த்தைக்கு என் ஆளை அனுப்பினால் சிரிப்பாலையே கவுத்திடுவாளே, என்று எண்ணி சிரித்தான். சட்டென்று அவன் புன்னகை மறையும்ப்படி ரவிசங்கர் ஒரு குண்டு போட்டார்.

"உலக அமைதிக்காக நாங்கள் ஒரு குழுவாக உலகத்தின் இருவது தேசங்களுக்கு சென்று வரவிரிக்கிறோம்", என்று அறிவித்தப்படி அந்த குழுவை மேடைக்கு வரவைத்தார். அதில் முதல் ஆளு நம்ம சிவாவோட ஆளுதான். அவள் முன்னே வந்து ஜனங்களை பார்த்து வணக்கம் சொல்லும்போது, ரவிசங்கர் கூறினார், "முதல் நாடாக சிங்கபூருக்கு செல்லவிருக்கிறோம்!". கரகோஷம் எழும்பியது.

"மச்சி! எனக்கு அதெல்லாம் தெரியாது டா! என்னையும் அந்த குழுவில் சேர்த்துக்கோங்க... பிளீஸ்!", என்று கார்த்திக்கேயன் காலில் விழாத குறையாக சிவா கெஞ்சினான்.

"இது என்ன ஸ்கூல் ட்ரிப்பா டா? நானும் வரேன்னு அடம் பிடிக்கற. குருஜிக்கு தெரிந்த நம்பிக்கையானவர்கள் மட்டும் செல்லும் ஒரு புனித யாத்திரை. தயவு செஞ்சு இத கொச்சை படுத்தாதே!", என்று கோபித்தான் கார்த்திக்கேயன்.

"சார் சார் பிளீஸ் சார்... நீங்க தான் சார் எனக்கு உதவி செய்யனும்...", என்று அடுத்த படியாக காமிராமேன் கணேஷ் காலில் விழுந்தான் சிவா. அவர் அவனை உற்று பார்த்து, தலையை ஆட்டி சிரித்தார்.

***

"கொஞ்சம் லெப்ட் சைடு வாங்க. கொஞ்சம் ரைட்..."

ஒரு கையில் காமிராவுடன், மருக்கையால் தனது அழகியை காமிரா சதுரத்திற்குள் கொண்டு வந்தான் சிவா. அவன் ஆளு வாயில் புன்னகையுடன் காமிராவை பார்த்தாள். அவள் பின்னே இருந்த மெர்லையன் வாயில் தண்ணீருடன் ஓரக்கண்ணால் காமிராவை பார்த்தது. இவ்வாறான ஒரு காட்சியை வாழ்க்கையில் காண்போம் என்று அவன் நினைக்கவில்லை. அவன் ஆளு இன்னிக்கி சிங்கபூரை சுத்திப்பார்க்க போகிறாள் என்ற செய்தி தெரிந்தவுடன், அவள் செல்லும் இடத்திற்கு சென்று தற்செயலாக சந்தித்ததுபோல் அமைத்துவிட்டான். கிளிக்!

“தேன்க்யூ!”, என்றபடி காமிராவை திரும்பவாங்கினாள் சிவாவின் அழகி.

“உங்கள எங்கயோ பாத்திருக்கேனே...” கண்களை சிறிதாக்கி யோசித்தாள்.

“குருஜி ஆஷ்ராமத்துல தான். சென்னைல.”

“ஓ எஸ்! இங்க என்ன பண்ணுறீங்க?”

“ஒரு படம் ஷூட்டிங்கிற்காக வந்தேன். தெரிஞ்ச டைரக்டர் தான்”, கம்பிமேல் சாய்ந்தப்படி சகஜமாக சொன்னான் சிவா.

“ஓஹோ...”

அடுத்து எதாவது கோப்பி ஷாப்பிற்கு அழைத்துச்சென்று பேச்சுகொடுப்போம் என்று முடிவு செய்தான். அவளும் ஒப்புக்கொண்டாள். நடத்துடா சிவா நடத்து என்று அவன் மனசு அவனை பார்த்து சொன்னது.

"நான் வாழ்கையில என்ன செய்ய நினைக்கிறேன் தெரியுமா?" என்று கோப்பி குடுத்திக்கொண்டே டபக்கென்று கேட்டாள்.

"இறைவனுக்கு சேவை செய்ய போகிறேன்னு சொல்லி கண்ணிகாச்த்ரீ ஆகாம இருந்தால் சரி", என்றது சிவாவின் மனசு.

"எனக்கு ஒரு பள்ளிக்கூடம் ஆரமிச்சு ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கணும்!"

“சுப்பர்! ஆரமிச்சுடலாம்...” கடந்த பத்து வருடங்களாக தினம் ஒரு ஸ்கூல் ஆரம்பித்தவன் போல விரல்களை சுண்டிக்கொண்டே சொன்னான் சிவா. அவன் சொல்வதை நம்பாதவாறு பார்த்தாள் அவன் ஆளு.

“நெஜமாங்க. ஒரு ஸ்கூல் ஆரமிக்கிறதுதான் என்னோட கனவே... நம்ம ஊருல இருக்கறதெல்லாம் ஸ்கூலா என்ன... கொழந்தை ஜெயில்! நம்ம விவேக்கானந்தா...”  

திடீரென்று வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப்பார்த்தனர். இருட்டிடும் வானத்தில் மரத்திலிருந்து உதிரும் பூக்கள் போல, வானவேடிக்கை. அசந்துபோய் சிவாவின் ஆளு வானையே பார்த்தாள். அந்த ராக்கெட்டின் பளிச்சிடும் வெளிச்சத்தில், சிவாவின் கண்களுக்கு அவள் பல பலவென மின்னினாள். மூச்சை உள்ளிழுத்தான் சிவா.

***

குப்பென்று மூச்சை வெளிவிட்டான். சரக்கு நிறைந்த பிலாஸ்டிக் கப்பை அவன் முகத்தின் முன் நீட்டினார் காமிராமேன் கணேஷ். அவர் கை ஒரு இடத்தில் நிற்காமல் தள்ளாடியது.

“இந்தாடா தம்பி...”

“நான் அவள கேட்டிருக்க கூடாது சார். மனச அப்படியே செதச்சுட்டா.”

“இது இருக்கே, இந்த மேட்டர்.. இது பசை மாதிரிடா. குடி. மனசு தானா ஒட்டிக்கும்.”

“ஏன் சார் படத்துல மட்டும் ஹீரோ ஊர விட்டு ஊரு போய் காதல் சொன்னா வேலைக்காவுது... ஆனா வாழ்க்கைல...”

“டேய் தம்பி... வாழ்க்கை வேற... சினிமா வேற...” இதை கூறும்போது கையை சிறிது ஆட்டியதால் சரக்கு கொஞ்சம் சிந்தியது. சிந்திய சரக்கிற்கு ஒரு வினாடி மௌன அஞ்சலி செலுத்திவிட்டு கணேஷ் தொடர்ந்தார், “இப்போ என்னையே எடுத்துக்கோ. சினிமாவுல மக்கள் என்ன பாத்து சிரிக்கறாங்க, ஆனா வாழ்க்கைல யூனிட்டே என்ன பாத்து மெரளும்.”

“எனக்கு இப்போ தான் சார் யுவன் பாடின ஒவ்வொரு பாட்டோட வலி புரியுது” கண் கலங்க ஆரமித்தான் சிவா. அவன் கண்களை துடைக்க அருகே சென்றார் கணேஷ், ஆனால் திடீரென்று சிவா அலறியது அவரையே மிரள வைத்தது.

“வான் பிளந்து கண்ணெதிரே வந்து நின்றாள்! சிரிப்பால் என் குட்டி மனதை வென்றாள்! அப்புறம் என்னை விட்டு... என்னை விட்டு சென்றாள்.. வஞ்ச... வஞ்சமகள்... என் மனதை கிழித்து தின்றாள்...”

“பெண்டாஸ்டிக்!” சிவாவும் கணேஷும் திரும்பினர். கணேஷின் வலது கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் எட்டி பார்த்தது, “டைரக்டர் சார் வாங்க...”

“இந்த மாதிரி ஒரு பாட்டு தான் எனக்கு வேணும். யாரு கணேஷ் இவரு?”

***

“அடுத்தப்படியாக சிறந்த புதுமுக பாடலாசிரியர் விருது!” மக்கள் கரகோஷம் இட்டனர். ஒவ்வொன்றாக தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரின் புகைப்படங்கள், விஜய் அவார்ட்ஸ் மேடையில் இருந்த பிரம்மாண்ட திரையில் காண்பிக்கப்பட்டது. சிவக்கார்த்திகேயன் தொடர்ந்து பேசினார், “அண்ட் தி அவார்ட் கோஸ் டூ...”

“சிவா!” கோட்டுசூட்டு அணிந்துக்கொண்டு தலையை சற்று குனிந்தவாறு மேடையேறினான் சிவா.

“நீங்க இந்த அவார்ட் வாங்கினா, நான் பாதி வாங்கின மாதிரி. நம்ம பேருல அப்படி ஒரு ஒற்றுமை. சொல்லுங்க சிவா” சிவா என்ன சொல்வது என்றுதெரியாமல் சிரித்தான்.

“சொல்லுங்க. எப்படி பீல் பண்ணுறீங்க?”

“எல்லோருக்கும் வணக்கம்”, என்று ஆரமித்து சிறிது இடைவெளி கொடுத்தான். யாரும் கைதட்டுவதுபோல் தெரியவில்லை. தொண்டையை கிலியர் செய்தவாறு, “எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு இந்த அவார்ட் ஜெயிச்சதுல. நான் எழுதுற ஒவ்வொரு வரிக்கும் எனக்கு தூண்டுதலா ஒரே ஒருத்தங்க தான். என்னோட வரிகள்ல இருக்கற அழகும் சரி காதலும் சரி, இரண்டுமே அவங்கனாலதான்.”

“அப்போ கண்டிப்பா மனைவியா இருக்க முடியாது”, என்று கேப்பில் கடா வெட்டினான் சிவகார்த்திகேயன். அரங்கம் சிரித்தது.

“எனக்கு அவங்க பேரு தெரியாது. உலகத்துல இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னும் தெரியாது. அந்த பீலிங் தான் இந்த ‘உசுலம்பட்டிக்காரன்’ படத்தோட வரிகள்ல வந்துச்சு. விஜய் டீவீக்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி! வணக்கம்!”

ஓரிரண்டு பேர் கைத்தட்ட, அவன் குனிந்து வணங்கினான். அப்போது மைக் அணைக்க பட்டிருந்ததால், அவன் விட்ட பெருமூச்சு யாருக்கும் கேட்கவில்லை.

***