December 21, 2012

எல்லாம் சினிமயம்


(The 2nd short story I wrote in Tamil for Thangameen contest. The topic given was 'Appa'. I shall revisit to edit spelling mistakes!)

தலையில் கை வைத்தப்படி அறையின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான் கோகுல். வீட்டில் நிசப்தம்.

"விட்டுருங்கப்பா... எல்லாத்தையும் விட்டுருங்க..." என்று தரையை பார்த்தப்படி முணுமுணுத்தான்.
கோகுலின் அருகில் நின்றிருந்த அவன் அப்பா மெதுவாக அவன் தொழின் மீது கை வைத்தார்.

"செத்துடுவேன் டா...", அவர் குரல் நடுங்கியது. "விட்டா செத்துடுவேன்..."

"செத்துப்போ! நான் தடுக்க முடியுமா? எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியவன்தேன்!" என்றான் கோகுல். சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை.

"டேய்! என்னடா நாயகன்லேர்ந்து திடீர்னு தேவர்மகனுக்கு தாவிட்ட!" என்றபடி, கோகுலின் அப்பாவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

"தெரில... தானா வந்துடுச்சு..." என்று இளித்தான் கோகுல். "தேவர்மகன்னு சொன்ன ஒடனே ஞாபகத்துக்கு வருது. கமலை இன்னிக்கு பார்த்தீங்களா?"

சடகோப்பன் லேசாக பெருமூச்சு விட்டார். "அவர் தங்கிருந்த ஹோட்டேலைத்தான் இன்னிக்குப் பூரா சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தேன். அஞ்சு நிமிஷத்துல என்னை ஒரு டாக்ஸி டிரைவர் முந்திட்டான்டா! ச்சே! கமல் என் டாக்ஸில ஏறி இருக்க வேண்டியது..."

இவ்வாறு வருந்திய கோகுலின் அப்பா பெயர் - சடகோப்பன். வேலை தேடி தஞ்சாவூரிலிருந்து சிங்கபூருக்கு வந்தபோது இளைஞராக இருந்தவர். பல வேலைகள் பார்த்து, முடி நரைத்து, சிறிய தொந்தி போட்ட பிறகு, வயது தற்போது 48இல் வந்து நின்றது. கடந்த சில வருடங்களாக சடகோப்பன் ஒரு டாக்ஸி ஓட்டுனர். மனைவியின் பெயர் சிவகாமி. அவள் மேல் உலகத்திற்கு டிக்கெட் வாங்கி சிறிது காலம் ஆகி இருந்தது. கோகுல் அவர்களின் ஒரே மகன். படிப்பு சிங்கபூர் பல்கலைக்கழத்தில் முதல் ஆண்டு இஞ்சினியரிங்.

சடகோப்பனும் கோகுலும் சினிமா வெறியர்கள் - ஒரு வாரத்தில் இரண்டு திரைப்படங்களாவது பார்த்து விடுவார்கள். பார்த்தப்பின் அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பார்கள். கடைசீயில் என்ன தான் இருந்தாலும் பாலச்சந்தர் போல எவனாலயும் படம் பண்ண முடியாது என்று சடகோப்பன் சொல்ல, கிறிஸ்டோபர் நோலன் போல எவனாலயும் படம் பண்ண முடியாது என்று கோகுல் சொல்ல, இருவருக்கும் தூக்கம் வரும்.

சடகோப்பனிற்கு நடிப்பில் பயங்கர ஆர்வம். வசந்தம் டீவீ தொடர்களில் டாக்ஸி டிரைவராக இரண்டு முறையும், ரோட்டில் நடந்து செல்லும் கதாநாயகனுக்கு வழி சொல்பவராக ஒருமுறையும் நடித்திருந்தார். (அவர் வரும் பிட்டு சீனை மட்டும் யூடுபிளிருந்து டவுன்லோட் செய்து தினம் பார்த்து ரசிப்பார்.) இதை தவிர நடிக்க பல வாய்ப்புகள் அவ்வப்போது வந்தாலும், ஏதோ காரணத்தால் அவை தட்டிப்போய் கொண்டேயிருந்தன. 

ஒரு முறை ஒரு நண்பர் சடகோப்பனிற்கு போன் அடித்து, "கடைசி நிமிஷத்தில் ஒருத்தன் கை விட்டுட்டான். நாடகத்துக்கு ஒரு ஆள் குறையுது. டக்குனு வா!" என்று சொல்ல, அப்போது அவர் டாக்சியில் இருந்த ஆளோ அந்த நாடக சபை இருக்கும் நேரெதிர் திசையில் உள்ள கிளப்பிற்கு செல்ல வேண்டும் என்று சொன்னார். இது போல பல முறை அவர் டாக்சி ஒரு திசையில் செல்ல, நடிப்பு வாய்ப்புகளோ டாக்சியின் புகைப்போல எதிர் திசையில் காற்றில் பறந்தன.

கமலை மிஸ் பண்ணிட்டோமே என்று வருந்திய தன் அப்பாவை பார்த்து, "ஆமா... அப்படியே நீங்க கமலை பார்த்திருந்தா மட்டும்...", என்று நக்கலான குரலில் கோகுல் கேட்டான், "மிஞ்சிப்போனா ஆட்டோகிராப் கொடுத்திருப்பார்... விஸ்வரூபம்ல கேரக்டர் கொடுத்திருப்பாரா என்ன?"

"கேரக்டர் கொடுக்காட்டியும் அவர் முன்னாடி அந்த மகாநதி சீனை ஒரு வாட்டி நடிச்சுகாட்டிடலாம்னு இருந்தேன்டா... அது நடக்காம போச்சு!"

"சரி, கமல் எதுக்காக சிங்கபூர் வந்திருக்காரு?"

"ஏதோ விருது கொடுக்கிற விழாவிற்கு தலைமை தாங்க..."

"ஓஹோ! அப்போ கொஞ்ச நாள் இங்க தங்குவார் போல. நாளைக்கு திரும்ப ட்ரை பண்ணி பாருங்க."

"அட போடா! வேற வேலை இல்லியா என்ன... இன்னிக்கே அம்பது டாலர் வேஸ்ட்!"

"என்ன சார்? ஒரு காரியம் நடக்கணும்னா விடாமுயற்சி வேணும்னு எனக்கு சொல்லிக்குடுத்த குரு நீங்க. நீங்க இப்படி சொல்லலாமா?" என்று கோகுல் பௌன்சர் போட அதை அடிக்காமல் விட்டுவிட்டு மெளனமாக சிரித்தார் சடகோப்பன்.

****

சடகோப்பனின் தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையிலிருந்து ஒரு குரல், "ஹலோ! சடகோப்பன்?"

குரலை கேட்டவுடனே சடகோப்பனிற்கு அது யார் என்று தெரிந்துவிட்டது. "ம். சொல்லுங்க பாலு சார். எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன். ஒரு வாரம் முன்னாடி சார்ட் பிலிம் ஒன்னு எடுக்கறேன்னு சொல்லி முகநூல்ல போட்டிருந்தேன், பாத்தீங்களா?"

"ஓ! நீங்க போட்ட அடுத்த நிமிஷமே லைக் செய்தேனே. உங்களுக்கு கூட மெசேஜ் அனுப்பியிருந்தேன் ஏதாவது கேரக்டர் இருக்குமான்னு..."

"அப்படியா! தெரியல. என் மொபைல் கொஞ்ச நாளா மக்கர் பண்ணுது. மெசேஜ் எதுவும் வர மாட்டேங்குது."

"இல்ல... நான் முகநூலில் மெசேஜ் அனுப்பியிருந்தேன்."

"ஓ! சரி எப்படியோ... இப்போ ஒரு பேராசிரியர் கேரக்டர் இருக்கு. ரெண்டு வரி டயலாக் தான். ஆனா ரொம்ப முக்கியமான கேரக்டர். நீங்க செய்வீங்களா?"

சடகோப்பனின் கண்கள் விரிந்தன. "கண்டிப்பா பாலு சார்! எங்க? எப்போ?"

"விவரம் நான் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்."

கடவுளாக பார்த்து அமைத்ததுப்போல் அந்த சார்ட் பிலிம் படப்பிடிப்பு திங்கள் அன்று நடைப்பெற இருந்தது. திங்களும் செவ்வாயும் சடகோப்பன் டாக்ஸிக்கு லீவ் விடும் நாட்கள். இதற்கு முன்னர் நிறைய முறை வேலையால் ஷூடிங்கிற்கு செல்ல முடியாத சூழ்நிலை. இந்த முறை அப்படி ஆகாததால் மனுஷன் செம்ம குஷி ஆகிட்டார். கோகுளோட சேர்ந்து வசூல் ராஜா, நம்மவர் போன்ற படங்களை பார்த்து பேராசிரியர் கதாப்பாதிரதிற்கு ஹோம்வொர்க் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

ஷூட்டிங்கிற்கு ஒரு நாள் முன்னர், செரங்கூன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சடகோப்பனின் டாக்ஸி என்ஜின் திடீரென்று அணைந்துப்போனது. ஓரம் கட்டி திறந்து பார்த்தால், கிழிந்தது கிருஷ்ணகிரி என்று தெரிந்தது. வண்டியை ரிப்பேர் செய்யணும்.

கோகுல் புருவங்களை உயர்த்தி தன் அப்பாவை பார்த்தான். "என்னப்பா எப்பவுமே வண்டி கூடவே நீங்க இருக்கனுமா என்ன?"

"அப்படி இல்லடா. நாளைக்கு நான் டாக்ஸி ஆபீசுக்கு போகணும். வண்டி ரிப்பேர் ஆய்டுச்சு. அவன் தான் எனக்கு டாக்ஸி வாடைகைக்கு கொடுத்தான் இல்லையா. கூப்பிடறான். என்ன செய்ய சொல்வாங்கன்னு தெரியல."

"அதுனால பாலு சார் கிட்ட ஷூட்டிங்கிற்கு முடியாதுன்னு சொல்லிட்டீங்களா?"

"வேற என்னடா செய்ய?"

"என்னப்பா இப்படி ஒவ்வொரு வாய்ப்பா..."

"எல்லாத்துக்கும் நேரம் வரும் டா. படத்துக்கா பஞ்சம்!"

****

டாக்சியை சரி செய்தப்பின் மூன்று மாதங்கள் ஓடின. ஒரு நாள் காலை மூன்று மணி இருக்கும். கொட்டாவி விட்டுகொண்டே டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தார் சடகோப்பன். பின் சீட்டில் ஒரு பெண்மணி பார்ட்டி உடையில் உட்கார்ந்து கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தாள். அவளை எங்கயோ பார்ததுப்போல் இருக்கிறதே என்று டாக்ஸி சிக்னலில் நிற்கும் போது சடகோப்பன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "ஒரு வேலை இவங்க தான் அந்த உல்லாசம் டீவீ தொடர் கதாநாயகியோ?" தன் முன்னே இருந்த கண்ணாடியில் அவளை உற்று பார்த்தார்.

கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து திரும்பினார். சிக்னலின் சிவப்பு விளக்கு பச்சை விளக்காக மாறியது. அதை கவனிக்காமல், "நீங்க உல்லாசம் தொடர்ல..." டமார்! என்றொரு சத்தம் அவர் காதையும் கேட்கவிருந்த கேள்வியையும் கிழித்தது.

திடுக்கிட்டு திரும்பி பார்த்தார். அவர் முன்னே ஒரு பெர்ராரி பேருந்தும் மற்றொரு டாக்சியும் சிதறி கிடந்தன. எது டாக்சி எது பெர்ராரி என்று தெரியாத அளவிற்கு. சடகோப்பன் ஒன்றும் புரியாமல் முழித்தார். அந்த நொறுங்கிக்கிடந்த டாக்சி சில நொடிகளுக்குமுன் அவர் டாக்சி பக்கத்தில் அவர் காத்திருந்த அதே சிக்னலில் நின்றிருந்தது. கண்மூடி திறப்பதற்குள் குறுக்கேசெல்லும் ரோட்டில் வந்த பெர்ராரி அடித்திருக்க வேண்டும். அந்த நொறுங்கிய டாக்சியையே பார்த்து கொண்டிருந்தார். அந்த டாக்சிக்கு பதில் இவர் முந்தியிருந்தால்... சட்டென்று டாக்ஸி கதவை திறந்து அவ்விரு பேருந்துகளையும் நோக்கி ஓடினார் சடகோப்பன். "ஆண்டவா! யாரும் இறந்திருக்க கூடாது... காப்பாத்து!"

****

கோகுலுக்கு ஆச்சர்யப்படுவதா இல்லை அதிர்ச்சி அடைவதா என்று தெரியவில்லை. 

"என்னப்பா திடீர்னு?"

"பெருசா ஒன்னும் காரணம் இல்லடா. வயசாகிடுச்சு. இனிமேலாவது மனசுக்கு பிடிச்ச வேலைய செய்வோமேன்னு..."

டாக்சியை திருப்பி கொடுத்துவிட்டு, அந்த வேலையையும் கை விட்டு, சென்னைக்கு செல்வதாக தீர்மானம் செய்திருந்தார் சடகோப்பன். 

"இந்த வருஷம் பூரா உன் தினசரி செலவுக்கு தேவையான பணம் சி. பீ. எப் லேர்ந்து எடுத்து உன் அக்கௌன்ட்ல போட்டுட்டேன். இந்த வீடை காலி பண்ணனும். அடுத்த நாளே நம்ம எரிக் சாரோட வீட்டுக்கு போயிடு. அவர் வீட்டுல ஒரு ரூம் காலியா இருக்கு."

"நான் உங்கள மிஸ் பன்னுவேன்ப்பா", என்றபடி சடகோப்பனை கோகுல் கட்டி அணைத்தான்.

சடகோப்பனும் அவனை இறுக்கி அணைத்தார். "கவலை படாதே டா! நீ தான் இப்போ வளந்துட்டியே... போன் இருக்கு. ஸ்கைப் இருக்கு. ஆனா என்ன, ஒன்னா சேர்ந்து படம் பார்க்க முடியாது..."

கோகுல் இளித்தான். "முடியும்ப்பா! குகிள் பிளஸ்ல ஹான்கௌட் அப்டின்னு இருக்கு. அது மூலியமா இணையத்துல ரெண்டு பெரும் சேர்ந்தே படம் பார்க்கலாம்!"

"ஓ!"

"ஆமா. சோ நீங்க சென்னைக்கு போய் என்ன பண்ண போறீங்க? எப்படி படத்துல சான்ஸ் தேடுவீங்க? இவ்வளவு நாளா கிடைக்காத வாய்ப்பு  உங்களுக்கு இப்போ எப்படிப்பா?"

சடகோப்பன் மெளனமாக இருந்தார். அவர் கண்முன்னே நடந்த விபத்தை பற்றி கோகுலிடம் சொல்லவில்லை. அவர் டாக்சி பின்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணை பற்றியும் சொல்லவில்லை. அவள் பாடலாசிரியர் மதன் கார்க்கியின் மனைவி என்பதையும் அவர் சொல்லவில்லை. அவங்க உயிரை தான் காப்பாற்றியதாக நினைத்து, "சென்னை வந்தீங்கன்னா உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் கண்டிப்பா என்னை  கேளுங்க" என்று நந்தினி கார்க்கி கூறியதையும் சடகோப்பன் கோகுலிடம் சொல்லவில்லை.

தன் மகனை பார்த்து லேசாக புன்னகைத்து, ஒரு விரலை சொடுக்கி, "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்!" என்று மட்டும் சொன்னார்.


****

(The accident mentioned in this story is based on - http://www.youtube.com/watch?v=oZG1HgOyFkU)

எல்லோரும் லைக் செய்யுங்கள்

(My first Tamil short story. Wrote it for a story writing contest organized by Thangameen. The topic given was 'நவீன யுகம்')

சமீபத்துல முகப்புத்தகம்னு ஒரு படம் பார்த்தேன். சார்ட் பிலிம். மரண மொக்கைன்னு சில பிரெண்ட்ஸ் சொன்னாங்க, சுமார்னு சொல்லி இரண்டு மூணுப் பேர் லைக் போட்டிருந்தாங்க. பேஸ்புக்ல ஒரு பய்யன் ஒரு பொண்ணை சந்திக்கிறான், ஆன்லைன்ல கடல போடறான், பிக்கப் பண்ணிட்டு நேர்ல சந்திக்கும்போது அந்த பொண்ணு குருடுனு தெரிய வருது. ஆனாலும் காதல் உண்மைன்னு சொல்லிட்டு அவள கல்யாணம் பண்ணிக்கேறன்னு சொல்லி ஹீரோவா நம்ம மனசுல நிக்கறான். இது தான் படத்தோட லைன்.

"நம்பர மாதிரி சொல்லுங்கடா! எவன் மச்சி நிஜ லைப்ல இந்த மாறி செய்வான்?" ன்னு என் பிரெண்ட் ஒருத்தன் நியாயமா கேட்டான். அந்த பிரெண்ட்சொல்லுறதுக்கு நானும் தலை ஆட்டிருப்பேன், ஆனா இரண்டு வர்ஷம் முன்னாடி எனக்கு நடந்த ஒரு அனுபவம் அப்படியே என் மண்டைய ப்ரீஸ் பண்ணிடுச்சு.

இரண்டு வருஷம் முன்னாடின்னா, சந்த்யா எனக்கு இன்னும் அறிமுகம் ஆகாத டையம். அதுனால வேலைக்கு போயிட்டு வந்தா வீட்டுல வெட்டியா தான் இருந்தேன். அப்போ எனக்கு ஒரு ஹாபி, டையம்பாஸ், என்டர்டைன்மெண்ட் எல்லாமே பேஸ்புக் தான். யார் எங்க போய் போட்டோ எடுத்தாங்க, தலைவர் பத்தி எவன் தப்பா பேசுறான், எந்த பய்யன் எந்த பொண்ணு பின்னாடி சுத்தறான் - இந்த மாதிரி எந்த டீடைல் நீங்க கேட்டாலும் அப்போ நான் புட்டு புட்டு வெச்சிருப்பேன். அப்படி ஒரு ஆர்வம்.

அந்த சமயம் என் பிரெண்ட் லிஸ்ட்ல ஒரு பய்யன் இருந்தான். பேரு விக்ரம். ஏதோ ஒரு போஸ்ட்டுல அவன் அடிச்ச கமென்ட் பிடிச்சதுனால அவனுக்கு பிரெண்ட் ரிக்குவஸ்ட் அனுப்பிச்சேன். ஒத்துக்கிட்டான். அவன நான் நேர்ல பார்த்ததே இல்ல. அவன் ப்ரோபைல் பார்த்தா செம்ம படிப்ஸ்னு தோனுச்சு. எல்லாம் இங்கிலீஷ் புக்ஸ், இங்கிலீஷ் பிலிம்ஸ், இங்கிலீஷ் கோட்ஸ். அப்பப்போ அவன் ஸ்டேடஸ் அப்டேட் புரியும். பெரும்பாலும் புரியாது. எல்லார் மாதிரியும் சும்மா படத்தோட ட்ரெயிலர்  இல்லாட்டி கார்டூன் மாதிரியான விஷயங்கள் ஷேர் பண்ண மாட்டான். உலக அரசியல் பத்தி ஏதோ ஒரு பேர் தெரியாத எழுத்தாளர் குமுருற கட்டுரை இல்லாட்டி இயற்கையை மனுஷன் எப்படி அழிக்கறான் அப்படிங்கர டாகுமெண்டரி - இது மாதிரி மூளையை பெசையிர மேட்டர் தான் போடுவான். சில சமயம் பார்க்க பாவமாகவே இருக்கும். "ஏதோ நல்லா சொல்லுரான்யா. ஆழ்ந்த கருத்து இருக்கற மாதிரி இருக்கு. ஆனா மக்களுக்கு புரியாததுனால லைக் வரமாட்டேங்குது... பாவம்..." 
ன்னு நான் அவன பத்தி நினைச்சது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.

ஒரு நாள் நான் நைட் ஷோ பார்த்துட்டு, படத்த பத்தி ஒரு நாலு நல்ல வார்த்த ஸ்டேடசா போட்டு இரண்டு லைக் வாங்கலாம்னு மும்முரமா டைப் பண்ணிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு அவன் ஸ்டேடஸ் வந்துச்சு. தமிழ்ல ஒரு அழகான காதல் கவிதை போட்டிருந்தான். என்னடா இது பீட்டர் திடீர்னு பொன்னுசாமியா மாறறானேன்னு  தோனுச்சு. இரண்டு நாள் கழிச்சு பார்த்தா பைய்யனோட ரிலேஷன்ஷிப்  ஸ்டேடஸ் மாறிடுச்சு. சுகந்தி அப்படிங்கற பொண்ணோட லவுஸ் பண்ணிட்டு இருக்கான் அப்படின்னு பேஸ்புக் எனக்கு தகவல் சொல்லிச்சு. ஓஹோ! பொண்ணு தமிழ் மீடியம் போல.

அதுக்கப்புறம் தினம் ஒரு தமிழ் கவிதை - கண்ணே, மணியே, பவழமேன்னு. கவிதைகளுக்கு பலே பலேன்னு பலப்பேர் அடிச்ச கமென்ட்ஸ் பார்த்து என் மனசு பெருமூச்சு விட்டுச்சு. இந்த மாதிரி வர்ணிக்க நம்ம வாழ்க்கைல ஒரு பாசிமணி கூட இல்லியேன்னு. நமக்கும் ஒரு நாள் மணி அடிக்கும் அப்படின்னு மனச தேத்திக்கிட்டு பல நாள் அவன் கவிதைக்கு லைக் போட்டிருக்கேன். நான் விட்ட பெருமூச்சு நாலையோ என்னவோ, சில நாட்கள்ல அவனோட தமிழ் ஆர்வ தீ ஆப் ஆயிடுச்சு. டபக்குனு அவன் ஹிஸ்டரிய கொஞ்சம் நோன்டிப்பாத்ததுல இரண்டு பேருக்கும் பிரேக்கப்னு தெரிய வந்தது. எப்படி சேர்ந்தாங்க... எப்படி பிரிஞ்சாங்க... ஒன்னும் தெரியல. ஆனா விக்ரம் ரொம்ப சோகமாய்ட்டான்னு மாத்திரம் தெரிஞ்சுது. சட்டி சுட்டதடா, வாழ்வே மாயம் பாடல்களோட பீலிங் இருக்கிற இங்கிலீஷ் பாடல்கள் ஒவ்வொன்னா ஷேர் பன்ன ஆரமிச்சான்.

ஒரு நாள் அவன் போட்டிருந்த ஸ்டேடஸ் ஓட சோகம் தாங்காம ஒரு பொண்ணு "என்ன டா விக்ரம்? என்ன ஆச்சு உனக்கு?" அப்படின்னு கமென்ட் அடிக்க, பய்யன் உள்ள அடக்கிவெச்சிருந்த காவேரிய ஓப்பன் பண்ணிட்டான். ஒரு நூறு கமென்ட்ஸ் அந்த ஸ்டேடஸ்ல இரண்டு பேரும் மாத்தி மாத்தி. ரைட்டு! அடுத்தது இந்த பொண்ணுதான் அப்படின்னு தெளிவாயிடுச்சு. அப்போதான் நமக்கு சந்த்யா கிட்டயிருந்து பிரெண்ட் ரிக்குவஸ்ட் வந்துச்சு. சோ ஒரு சில நாட்களுக்கு என்னோட கவனம் வேற திசைல திரும்பிடுச்சு.

இரண்டு வாரம் கழிச்சு ஒரு நாள், பாதி தூக்கத்துல நியூஸ்பீட தடவிக்கிட்டு இருந்தப்போ, நாலு போட்டோ கண்ணுக்கு முன்னாடி குதிச்சுது. விக்ரமோட கல்யாண போடோஸ். டேய்! என்னடா இது சொல்லாம கொள்ளாம! யார் கல்யாண பொண்ணு? அன்னிக்கி இவன் சோக கதைய கேட்டவளா? பொறுமையா அவன் டைம்லைன் பார்த்தப்போ தான் தெரிஞ்சுது நான் இரண்டு வாரத்துல ஒரு மெகா
சீரியலே மிஸ் பண்ணிட்டேன்னு. விக்ரமுக்கு விஜய் டி.வீ.யின் நீயா நானா பார்க்கற பழக்கம் உண்டு போல. ஒரு நாள் அவங்க ஷோவுல போய் கலந்துக்கிட்ட வீடியோவ ஷேர் பண்ணியிருந்தான். ஏதோ மென் வெர்சஸ் வுமென் டாபிக். அங்க வந்த ஒரு பொண்ணு அவள ஒரு பய்யன் ஏமாத்தின கதைய சொல்லி அழுதிருக்கா. இவன் அத நேர்ல பார்த்து பீல் ஆகி, அந்த பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கறேன் அப்படின்னு சபையில சொல்லிருக்கான். இதக்கேட்டு பெருமித பட்டு கிளாப் பண்ணி அவன கட்டி பிடிச்சிருக்காரு கோபிநாத். அப்புறம் சொன்ன மாதிரியே அந்த பொண்ண கல்யாணமும் பண்ணியிருக்கான். அஞ்சு நிமிஷம் அப்படியே வாய பொளந்து ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருந்தேன்.

ஒரு பொண்ண பத்தி முன்னப்பின்ன தெரியாம அவள கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொல்ல எவ்வளோ தில்லு வேணும், அப்படின்னு ஆச்சர்யப்பட்டேன். முகப்புத்தகம் படத்துல ஹீரோக்கு இருந்த அதே தில்லு! மனசளவுல விக்ரமோட பெரிய விசிறி ஆகிட்டேன். அன்னிலேர்ந்து அவங்க கல்யாண வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு அப்படின்னு பால்லோ பண்ணிட்டு இருக்கேன். விக்ரமுக்கு நான் யார்னுகூட தெரியுமா தெரியல. ஆனா என் வாழ்க்கைக்கு அவன் ஒரு பெரிய இன்ஸ்பிரேசன். எந்த விதத்துலன்னு கேக்கறீங்களா? நான் சந்த்யா கிட்ட ப்ரோபோஸ் பண்ணதே விக்ரம்நால தான். அவன் கலந்து கொண்ட நீயா நானா எபிசோடு பார்த்த அப்புறம், என்னன்னு தெரியல, உடம்புக்குள்ள வேகமா இரத்தம் பாயிர உணர்வு. அப்படியே கன்ன மூடினா இரண்டு அழகான கவிதை. அத டப்புன்னு போன் எடுத்து சந்த்யா கிட்ட சொன்னேன். அன்னிக்கு மயங்கினவதான். காதல்ல மட்டும் இல்ல. என்னோட வேலையில கூட எப்போவாச்சும் ஒரு முடிவு எடுக்கணும்னா சட்டுன்னு மனசுக்கு எது சரின்னு படுதோ அத செய்வேன். இந்த யுக்திய எனக்கு 
சொல்லி கொடுத்ததே விக்ரம் தான்.

அந்த விக்ரமுக்கு எப்படி நன்றி சொல்வதுன்னு பல நாள் குப்புற படுத்து யோசிச்சிருக்கேன். உருப்படியா எதுவும் தோனல. இன்னிக்கு அவனுக்கு ஒரு சின்ன குழந்தை பிறந்திருக்கு. அவன் மனைவி குழந்தையுடன் பேஸ்புக்ல ஒரு போட்டோ போட்டிருந்தான். அத பார்த்து ஒரு லைக் போடும்போது எனக்கு ஒரு கவிதை தோனுச்சு, "துரோணரின் படத்தை லைக் செய்ய, கட்டை விரல் காட்டும் பொத்தானை அழிற்றி, குருதட்சிணை கொடுக்கிறான் இந்த ஏகலைவன்!" எப்படி கவிதை? சந்த்யாவுக்கு ரொம்ப பிடிச்சுது இது.